சென்னை புறநகர் மின்சார ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசு அதிகரிப்பு
மத்திய அரசு நேற்று திடீரென்று ரயில் கட்டணத்தை உயர்த்தியது. கிட்டத்தட்ட 20 சதவீதம் அளவுக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
-புறநகர் ரயில் (மின்சார ரயில்) 2ம் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
- பாசஞ்சர் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 3 காசு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
- 2ம் வகுப்பு மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 2ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் கிலோ மீட்டருக்கு 6 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
- முதல் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 3 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
- ஏ.சி. சேர் கார் மற்றும் ஏ.சி. மூன்று அடுக்கு வகுப்புக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 10 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும்.
மின்சார ரயில் கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்?:
இந்த கட்டண உயர்வால் 2ம் வகுப்பு மின்சார ரயில் கட்டணம் 35 கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கும். அதாவது 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயரும். பாசஞ்சர் ரயில் கட்டணம் 135 கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் அதிகரிக்கும்.
படுக்கை வசதி கொண்ட 2ம் வகுப்பு கட்டணம் 770 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் கூடும், அதாவது 270 ரூபாயில் இருந்து 320 ரூபாயாக அதிகரிக்கும்.
ஏ.சி. சேர் கார் கட்டணம் 387 கிலோ மீட்டருக்கு 40 ரூபாய் அதிகரிக்கும், அதாவது 345 ரூபாயில் இருந்து 385 ரூபாயாக அதிகரிக்கும்.
ஏ.சி. 3 அடுக்கு வகுப்பு கட்டணம் 717 கிலோ மீட்டருக்கு 76 ரூபாய் அதிகரிக்கும். அதாவது 724 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக கூடும்.
ஏ.சி. 2 அடுக்கு வகுப்புக்கான கட்டணம் 721 கிலோ மீட்டருக்கு 48 ரூபாயும், ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 547 கிலோ மீட்டருக்கு 56 ரூபாயும் அதிகரிக்கும்.
இந்த கட்டண உயர்வுகள் வரும் 21ம் தேதி (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பயணிகள் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ள போதிலும், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை.