பெண்களுக்கு பாதுகாப்பற்ற தலைநகர் டெல்லி: சுப்ரீம் கோர்ட் கவலை
டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் நேற்று கவலை தெரிவித்தது.
தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் குற்றங்கள் தொடர்பாக தேசிய சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர் நிபுன் சக்சேனா உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் கூறுகையில், தலைநகரில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி பலியான பிறகும் அத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கடந்த டிசம்பர் 16-ந் தேதி நடைபெற்ற பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதால் இந்தப் பிரச்னைகள் முடிந்து விட்டதாகக் கருதக்கூடாது. அதிகரிக்கும் குற்றங்கள், பாலியல் கொடுமைகள் போன்றவற்றால் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்புப் இல்லாத நிலை இருப்பதாக உணருகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு, டெல்லி அரசு, தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications