பொங்கல் கொண்டாட்டம்: ரூ. 220 கோடிக்கு குடித்து தீர்த்த குடிமகன்கள்

தமிழ்நாடு முழுவதும் 6,850 "டாஸ்மாக்' கடைகள் மூலம், மது விற்பனை நடக்கிறது. மது விற்பனையில், ஆண்டுக்கு ஆண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
220 கோடி விற்பனை
பொங்கல் பண்டிகை விற்பனை இலக்கு 300 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்கு ஏற்ப விற்பனை இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், கடைகளில், 15 நாள் விற்பனைக்கு, தேவையான சரக்குகள் குவிக்கப்பட்டன. பொங்கலுக்கு முதல் நாள், ஜனவரி 13ம் தேதி, அதிகாரிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 108 கோடி ரூபாய்க்கு, சரக்கு விற்பனை நடந்தது. அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகை நாளில், 112 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்து உள்ளது. இரண்டே நாளில், 220 கோடி ரூபாய் வரை, சரக்கு விற்பனை நடந்துள்ளது. இதுவே முதல் முறை.
நேற்று விடுமுறையை தொடர்ந்து, இன்று, கரிநாளாக கடை பிடிக்கப்படுவதால், இன்றும், 100 கோடி ரூபாய் வரை, சரக்கு விற்பனை நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் நிர்ணயித்த இலக்கு பூர்த்தி ஆகிவிடும் என, அதிகாரிகள் நம்புகின்றனர். இது, அதிகாரிகளை நிம்மதி பெரு மூச்சு விடச் செய்துள்ளது.
புத்தாண்டை விட அதிகம்
தற்போது, டாஸ்மாக் கடைகளில் வார நாட்களில், 50 கோடி ரூபாய் வரையிலும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 75 கோடி ரூபாயும், விசேஷ தினங்களில், 90 கோடி ரூபாயை தாண்டியும், மது விற்பனை நடப்பது வழக்கமாக உள்ளது. 2013ஆண்டு பிறப்பை முன்னிட்டு, "டாஸ்மாக்' விற்பனை இலக்கு, 200 கோடி ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 177 கோடிக்கு மட்டுமே விற்பனை நடந்தததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது பொங்கல் பண்டிகைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிவிடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மின்வெட்டுப் பிரச்சினை, வறட்சி, வேலையின்மை உள்ளிட்ட சிக்கல்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் குடிமகன்கள் இரண்டு நாட்களில் 220 கோடி ரூபாய்க்கு குடித்து தீர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications