ஊழலுக்கு எஸ்.சி, எஸ்.டி, பி.சிதான் காரணம்-திமிர் பேச்சு ஆசிஷ் நந்தி கைதுக்கு பயந்து தப்பியோட்டம்!
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் பேசிய ஆசிஷ் நந்தி, ஊழலுக்கு காரணமே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மறும் பிற்படுத்தப்பட்டோர்தான் என்று பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் கூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
கைது அபாயம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையங்களும் ஆசிஷ் நந்தியின் திமிர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆசிஷ் நந்தி மற்றும் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவின் இயக்குநர் சஞ்சய் ராய் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மேலும் ஆசிஷ் நந்தி பேசிய வீடியோ பதிவையும் கோரியிருந்தனர்.
இதனால் எப்படியும் தம்மை போலீசார் கைது செய்துவிடுவர் என்று பயந்துபோன இந்த திமிர் பேச்சாளர் திடீரென பயந்து போய் ஜெய்ப்பூரை விட்டு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
இதனிடையே ஆசிஷ் நந்தி மன்னிப்பு கேட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த மன்னிப்பையெல்லாம் ஏற்க முடியாது.. சாதி வெறியோடு பேசிய ஆசிஷ் நந்தியை கைது செய்தாக வேண்டும் என்பதில் பகுஜன் சமாஜ்கட்சி உறுதியாக இருப்பதாக அறிவித்திருக்கிறது.
யார் இந்த சாதிவெறியர் ஆசிஷ் நந்தி?
வங்காளியான ஆசிஷ் நந்தி, பீகாரின் பகல்பூரில் 1937ம் ஆண்டு பிறந்தவர். பின்னர் கொல்கத்தாவுக்கு அகதியாக ஆசிஷ் நந்தியின் குடும்பம் புலம் பெயர்ந்து போனது. தம்மை பியூசில் போன்ற பல்வேறு உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தக் கூடிய மனித உரிமைப்புகளில் இணைத்துக் கொண்டு 'உரிமைக்கு குரல்' கொடுப்பதாக அடையாளம் காட்டியவர். இதனால் அவரை முற்போக்கு முகம் கொண்டவராகவும் கருதியவர்களும் உண்டு.
பல்வேறு பன்னாட்டு நிதி உதவி பெறக் கூடிய மனித உரிமை அமைப்புகளில் பொறுப்பு வகித்த ஆசிஷ் நந்தி, பொறுப்பே இல்லாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக கருத்துகளை அமிலமாகக் கொட்டியிருக்கிறார்.