ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை தடை செய்து தான் பாருங்களேன்: ஷிண்டேவுக்கு ராஜ்நாத் சிங் சவால்
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக ஆகியவை தீவிரவாத அமைப்புகள் என்று நினைத்தால் அவற்றை தடை செய்ய வேண்டியது தானே என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு சவால் விட்டுள்ளார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில்,
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தீவிரவாதிகளை உருவாக்குகிறது என்று நினைக்கிறீர்களா? பாஜக, ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் இந்து பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளீர்கள். நாங்கள் கூடத் தான் அந்த பயிற்சி முகாம்களில் பங்கேற்றுள்ளோம். அதனால் நாங்கள் தீவிரவாதிகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி என்றால் எங்களை சிறையில் அடையுங்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தீவிரவாத அமைப்புகள் என்று நீங்கள் கருதினால் அவற்றை ஏன் தடை செய்யக் கூடாது? அவைகளுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளியிடுவது தானே?
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பயிற்சி முகாம்கள் இந்து பயங்கரவாத பயிற்சி முகாம்கள் என்று கூறியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்காவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசுக்கு பிரச்சனை ஏற்படும்.
ஷிண்டேவை பேசவிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2007ம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள மசூதி அருகேயும், அஜ்மீரிலும் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு லஷ்கர் இ தொய்பா தான் காரணம் என்று உலகமே கூறுகையில் அதற்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தான் காரணம் என்று ஷிண்டே கூறுகிறார். அவரது பேச்சுக்காக பிரதமரும், சோனியாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.