தனி தெலுங்கானா- எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிய மத்திய அரசு! தொடரும் போராட்டம்!
டெல்லி: ஆந்திர தனித் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்த தமது முடிவை மத்திய அரசு மீண்டும் ஒத்திவைப்பதாக அறிவித்திருப்பது ஆந்திர மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனித் தெலுங்கானா மாநிலம் கோரி அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. தெலுங்கானா பகுதி காங்கிரஸ் கட்சியினரும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் இன்று தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பாக முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்திருந்தார். இதனால் தனித் தெலுங்கானா தனி மாநிலம் உருவாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தெலுங்கானா தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இறுதி முடிவெடுக்க இன்னும் சிறிது காலமாகும் என்றார்.
இதேபோல் மத்திய அமைச்சரும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், ஆந்திராவின் அனைத்து பகுதி மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்த வேண்டியுள்ளது. அவர்கள் அனைவரும் டெல்லிக்கு அழைக்கப்பட வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவரையும் அழைக்க உள்ளோம். இவர்கள் அனைவரையும் விரைவில் அழைத்துப் பேசி முடிவு அறிவிப்போம் என்றார் அவர்.
இதனால் தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு இன்று எந்த முடிவையும் அறிவிக்காமல் வழக்கம் போல ஒத்திபோட்டுவிட்டது. இதனால் அதிருப்தியில் இருக்கும் தெலுங்கானா போராட்டக் குழுவினர் கடுமையான போராட்டங்களை இன்று நடத்தக் கூடும் என்பதால் ஹைதராபாத் நகரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு முடிவை ஒத்திவைப்பதாக அறிவிக்கும் முன்பே நேற்றே ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.