கூடங்குளம்: அமிலம் கலந்த கழிவு நீர் கடலில் கலக்கப்படுகிறது- உதயகுமார் புகார்

அணு உலை செயல்படாத நிலையிலேயே கழிவை கடலில் கலக்கிறார்கள். இதனால் கடல் வளம் கண்டிப்பாக அழிந்து போகும். அணு உலையில் இருந்து அமிலம் கலந்த கழிவு நீர் கடலில் கலப்பதால் அது கடல் நிறத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் பயங்கர ரசாயன வாடையும் அடிக்கிறது. இதனால் அந்த பகுதியில் யாரும் மீன்பிடிக்க செல்ல முடிவதில்லை.
மத்திய அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளம் அணு உலையை பொறுத்தவரை மக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்று கூறியிருக்கிறார். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்துள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றும் பணிகள் நடந்து வரும் காரணத்தால்தான் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று அவர் கூறியிருக்கிறார். அப்படி என்றால் கூடங்குளம் அணுஉலை இதுவரை பாதுகாப்பாக இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்த அணுஉலை உலகத்தரம் வாய்ந்தது என்றும், 3-ம் தலைமுறைக்கான தொழில் நுட்பம் சேர்த்திருக்கும் என்றும் அப்துல் கலாம், எம்.ஆர்.சீனிவாசன், இனியன் குழு, முத்துநாயகம் ஆகியோர் மக்களிடம் கூறினர். அதற்கு பிறகு அணு உலையில் கசிவாகி விட்டதாக கூறுகிறார்கள்.
3-ம் தலைமுறைக்கான அணு உலை என்றால் பொருத்திய உடன் சரியானதாக இருக்க வேண்டும். கசிவு ஏற்பட்டு விட்டது என்பதால் முதல் நிலை ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மைக்கு மாறாக மக்களின் பாதுகாப்பு என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருக்கிறார்.
அணு உலை பற்றிய உண்மையை சொல்லா விட்டால் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஆகவே உண்மையை மறைக்காமல் அணு உலை பற்றிய செய்திகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உதயகுமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications