ஜெயலலிதா கவர்னர் பதவிக்கு வேண்டுமானால் ஆசைப்படலாம், பிரதமர் பதவிக்கு அல்ல- ஈவிகேஎஸ்
அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ன? தனித்தே டெல்லியைப் பிடிப்போம் என்று கூடச் சொல்வார். நடப்பதற்குச் சாத்தியமான விஷயம் என்றால்தானே அதன் செயல்முறைகள் குறித்துக் கவலைப்பட வேண்டும்?.
வெறும் 14 எம்.பி-க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசை ஆட்டிப் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஜெயலலிதா. அது முடியாதபோது அவருக்கு ஆத்திரம் பொங்குகிறது.
'நாற்பதையும் பிடிப்போம்... நானே பிரதமராவேன்! என்கிறார். இந்தியப் பிரதமர் பதவியில் அமருவதற்கு எந்தஒரு குடிமகனுக்கும் உரிமை உண்டுதான். ஆனால், ஒவ்வொருவரும் தங்கள் உயரத்தை உணர வேண்டும்.
இன்றைய முதல்வர் ஜெயலலிதா, அடுத்தபடியாக கவர்னர் பதவிக்கு வேண்டுமானால் ஆசைப்படலாம். அதை நேரடியாகக் கேட்டால், அவருக்கு கவர்னர் பதவியை வழங்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்றார்.