ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.1,545 கோடி ஒதுக்க அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை
இது குறித்து அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதி தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருவோருக்கு மிகவும் அவசியமாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, ஆவடியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக இருங்காட்டு கோட்டைக்கு இணைப்புடன் கூடிய கூடுவாஞ்சேரி வரையிலான 60 கிலோ மீட்டர் நீள புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும்.
அரியலூர்-தஞ்சாவூர் பாதை தமிழகத்தின் முதன்மை மற்றும் துணை பாதைகளை இணைக்கும் வகையில் அமையும். இதனால் திருச்சி-தஞ்சாவூர் இடையே சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து நெரிசல் குறையும்.
சேலம்-ஓமலூர் இரட்டை பாதை மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கான அதி முக்கிய இணைப்பாக திகழும். மொரப்பூர்-தருமபுரி பாதை ஓசூர் வழியேயான பெங்களூர்-சேலம் பாதையும், ஜேலார்பேட்டை வழியேயான சென்னை-கோயம்புத்தூர் பாதையும் இணைக்கும்
சென்னைக்கான முதன்மை மற்றும் துணை பாதைகளை இணைக்க ஏதுவாக ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம்- விருத்தாச்சலம் இடையே புதிய பாதை அமைக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஐ.சி.எப்பில் ஆண்டுக்கு 2,500 ரயில் பெட்டிகள் தயாரிக்கும் வகையில் உற்பத்தி திறனை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் துரந்தோ, மலைக்கோட்டை, நீலகிரி, சேரன், ஏற்காடு, பாண்டியன், கன்னியாகுமரி போன்ற முக்கிய விரைவு ரயில்கள் அனைத்துமே மிகவும் பழைய ரயில் பெட்டிகளுடன் இயங்குகின்றன. தெற்கு ரயில்வேயில் ரயில் பெட்டிகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன.
தெற்கு ரயில்வேக்கான ரயில் பெட்டிகள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தஞ்சாவூர்-நீடாமங்கலம், திருவாரூர்-நாகூர், திருச்சி- தஞ்சாவூர், திருச்சி-திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர்- கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் டேமு சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
மன்னார்குடியிலிருந்து திருச்சி, ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கும், தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னைக்கு தினசரி விரைவு ரயிலும், சென்னை-திருவாரூர், வேளாங்கண்ணிக்கு தினசரியும், காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் விட வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் 3வது முனையும் அமைக்க அனுமதிக்கப்பட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. இதனை போதிய நிதி ஒதுக்கி விரைவுபடுத்த வேண்டும். ராயபுரத்தை சென்னையின் 4வது முனையமாக மாற்ற வேண்டும்.
26ம் தேதி சமர்ப்பிக்கப்படும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தேவையான ரூ. 1545 கோடி நிதி ஒதுக்கி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.