2ஜி ஸ்பெக்ட்ரம் செய்திக் குறிப்பில் கடைசி நேரத்தில் திருத்தம் செய்தார் ராசா: அட்டர்னி ஜெனரல்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்தி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற காலத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாஹனவதி, மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பாக பல்வேறு நீதிமன்ற விசாரணைகளிலும் தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்திலும் ஆஜராகியுள்ளார்.
இந் நிலையில் அவரையும் ஜேபிசி விசாரிக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரி வந்த நிலையில், நேற்று அவரிடம் ஜேபிசி விசாரணை நடத்தியது.
அப்போது 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பங்களை வரவேற்பது குறித்து தயாரிக்கப்பட்ட செய்திக்குறிப்பு குறித்து அவரிடம் ஜேபிசி உறுப்பினர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த வாஹனவதி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விண்ணப்பங்கள் தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை தயாரித்த செய்திக் குறிப்பு ஜனவரி 7ம் தேதி என்னிடம் காட்டி ஒப்புதல் பெறப்பட்டது. இந்த செய்திக் குறிப்பின் வரைவை அப்போதைய தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெஹுரா என்னிடம் காட்டினார். அதில் 4 பாராக்கள் இருந்தன. அதற்கு நான் ஒப்புதல் அளித்தேன்.
ஜனவரி 10ம் தேதி பத்திரிகைகளில் அந்த செய்திக் குறிப்பு வெளியானது. ஆனால், அப்போது நான் ஒப்புதல் அளித்த குறிப்பில் இருந்த சில பகுதிகள் அதில் இல்லை, அவை நீக்கப்பட்டிருந்தன.
விண்ணப்பம் செய்த இரு நிறுவனங்களுக்கு ஒரே தகுதி இருக்கும் பட்சத்தில் முதலில் விண்ணப்பித்த நிறுவனத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற மாற்றமும் அதில் செய்யப்பட்டிருந்தது.
மேலும் "திருத்தங்களுடன் செய்திக் குறிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது'' என்று ஆ.ராசா கைப்பட எழுதிய குறிப்பு பின்னர் சேர்க்கப்பட்டது. மற்றொரு பேனாவைக் கொண்டு இந்தக் குறிப்பு எழுதப்பட்டது.
இதைத் தான் நான் சிபிஐயிடமும் தெரிவித்தேன். இதனால் தொலைத் தொடர்புத் துறை வழியாக இறுதியாக பத்திரிகைகளில் வெளியான செய்திக் குறிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றார் வாஹனவதி.