ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பெண்கள் மீதான ஆசீட் வீச்சு சம்பவங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடைய மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு லஷ்மி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி லோதா முன்பு விசாரணைக்கு வந்தது.
பெண்கள் மீது ஆசீட் வீசி தாக்குதல் நடக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது கடும் அதிருப்தி அளிப்பதாக நீதிபதி லோதா தெரிவித்தார்.
ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு
கடைகளில் போய் யார் வேண்டுமானாலும் ஆசிட் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருப்பதால், பெண்கள் ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு ஆளாகி வருவதாக நீதிபதி கூறினார். எனவே ஆசிட் விற்பனையை ஒன்று தடை செய்ய வேண்டும் இல்லை அதனை முறைப்படுத்த வேண்டும். அவ்வாறு முறைப்படுத்தினால் அது எளிதாக பொதுமக்கள் கைகளில் கிடைக்க வாய்ப்பில்லை என நீதிபதி தெரிவித்தார்.
துரித நடவடிக்கை
இவ்விகாரத்தில் விரைவில், தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 6 வாரங்களுக்குள் மத்திய அரசு -மாநில தலைமைச் செயலர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதில் ஆசிட் வீச்சு சம்பவத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ செலவு, நிவாரணம்
10 வாரங்களில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார். மேலும் ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடைய மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் அவர்களுக்கான நிவாரணத் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வர்மா கமிட்டி அறிக்கை
ஆசிட் வீச்சு குற்றத்தை, மற்ற குற்றங்களை விட வித்தியாசமான குற்றம் (Distinct Crime) என்பதை வலியுறுத்தும் சட்ட திருத்தம் இந்திய தண்டனை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தவிர சமீபத்தில் வெளியான நீதிபதி வர்மா கமிட்டி அறிக்கையில், ஆசிட் வீசுவது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் மோசமான குற்றம் என்றும் அதனை தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டங்களை நிறைவேற்ற பரிந்துரை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.