ராஜபக்சே இந்திய அரசை அவமதித்துவிட்டார்: ராமதாஸ் தாக்கு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக் கூடாது என்றும் அந்நாட்டு அதிபர் ராஜபட்சே பேசியிருக்கிறார்.
2002ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சு நடத்திய ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசு, தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஒப்புக் கொண்டது. அதன் பிறகு அரசுக்கும், புலிகளுக்கும் இடையே போர் மூண்டதால் அமைதி முயற்சி தோல்வி அடைந்தது.
2012 ஜனவரி 17ம் தேதி அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்தபோது, தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என ராஜபட்சே உறுதி அளித்திருந்தார். ஆனால், இப்போது தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என பேசியிருக்கிறார்.
இது கண்டிக்கத்தக்கது. ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வகை செய்வோம் என்று கூறி வரும் இந்திய அரசை அவமதிக்கும் வகையில் ராஜபட்சேவின் பேச்சு அமைந்துள்ளது.
இலங்கை இனப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே தீர்வு என்பதை உணர்ந்து அதனை அடைவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.