குஷ்பு மீது திடீரென ஏன் கொந்தளிக்கிறது திமுக...??
சென்னை: நடிகை குஷ்புவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கட்சி திமுக. திமுக தலைவர் கருணாநிதிக்கு நிகராக அவருக்கும் போராட்டக் களங்களில் முக்கியத்துவம் கொடுத்த கட்சி திமுக. பிரசார பீரங்கியாகவும் அவரை உயர்த்தி வைத்து அழகு பார்த்தது. இப்போது ஸ்டாலினுக்கு பாதகமான முறையில் பேசியதாக வந்த செய்தியைத் தொடர்ந்து திமுகவினர் குஷ்புவுக்கு எதிராகக் கிளம்பியுள்ளனர்.
ஆனால் குஷ்புவை சமீப காலமாகவே திமுக தலைமை ஒதுக்கி வைத்து வருவதாக அரசல் புரசலாக செய்திகள் உள்ளன. என்ன காரணம் என்று சரியாக கணிக்க முடியாவிட்டாலும் கூட அவரை திமுக தலைமை ஓரம் கட்ட ஆரம்பித்தது உண்மை என்று சொல்கிறார்கள்.
குஷ்பு அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து போலத்தான். ஆனால் இது திட்டமிட்ட விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.
கற்புப் பேச்சால் கண்ணீர் விட்ட குஷ்பு
அது 2005ம் ஆண்டு. அப்போது அதிமுக தரப்புடன் சற்றே நெருக்கமாக இருந்தார் குஷ்பு. இந்த நேரத்தில்தான் கற்பு குறித்து அவர் பேசப் போக அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் ஜெயா டிவியில் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார்.
சரமாரியாக போடப்பட்ட வழக்குகள்
கற்பு பேச்சை எதிர்த்து தமிழகம் முழுவதும் குஷ்பு மீது சரமாரியாக வழக்குகள் போடப்பட்டன. இதனால் கதிகலங்கிப் போனார் குஷ்பு.
காங்கிரஸை நாடிய குஷ்பு
இந் நிலையில் காங்கிரஸில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகின. ராகுலை சந்திக்கப் போகிறார் என்று செய்தி வந்தது.
உச்சநீதிமன்றத்தில் கிடைத்த எதிர்பாராத வெற்றி
தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை எதிர்த்து உச்சநீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் குஷ்பு. அந்த வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், குஷ்பு பேசியது சரியே என்று கூறி அவர் மீதான அத்தனை வழக்குகளையும் ஒரே தீர்ப்பில் ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதிரடியாக திமுகவுக்குத் தாவிய குஷ்பு
இந் நிலையில் காங்கிரஸில் சேருவார் குஷ்பு என்று எதிர்பார்க்கப்பட்ட குஷ்பு திடீரென யாரும் எதிர்பாராத வகையில் திமுகவில் போய்ச் சேர்ந்தார் குஷ்பு.
ஜெயா டிவியிலிருந்து நீக்கம்
குஷ்பு இப்படி திமுகவில் போய்ச் சேர்ந்ததால் கடுப்பான ஜெயா டிவி நிர்வாகம் அவரை ஜாக்பாட் நிழ்ச்சியிலிருந்து தூக்கியது.
திமுகவின் பிரசார பீரங்கியானார்
திமுகவில் சேர்ந்த குஷ்பு அங்கு முக்கியத்துவம் பெறலானார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியது. திமுகவின் முக்கியப் பேச்சாளராக, பிரசார பீரங்கியாக வலம் வ்நதார்.
கருணாநிதிக்கு சமமாக
கிட்டத்தட்ட கருணாநிதிக்கு நிகரான முறையில் குஷ்புவை தூக்கி வைத்துக் கொண்டாடினர். திமுகவின் போராட்டங்களின்போது கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோருக்கு அடுத்து குஷ்புவின் பெயரையும் சேர்க்க ஆரம்பித்தனர்.
கையைப் பிடித்து இழுத்த திமுகவினர்
இப்படி எல்லாமே சுமூகமாக போய்க் கொண்டிருந்த நிலையி்ல்தான் சென்னையில் நடந்த திமுக கூட்டத்திற்கு வந்திருந்த குஷ்புவின் கை மற்றும் இடுப்பை சிலர் பிடித்து விட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் குஷ்பு பெரும் அதிர்ச்சி அடைந்தாராம்.
ஓரம் கட்ட ஆரம்பித்த திமுக தலைமை
இந்த சம்பவத்திற்குப் பி்ன்னர் திமுக கூட்டங்களுக்குப் போவதை குறைக்க ஆரம்பித்தார் குஷ்பு. இருப்பினும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே போய் வந்தார். இந் நிலையில் திமுக தலைமையும் குஷ்புவை ஓரம் கட்ட ஆரம்பித்தது. கோபாலபுரம் வீட்டுக்கு வர அவருக்கு தடை போடப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.
அழகிரி மீது காட்டிய பாசம் காரணமா?
இந் நிலையில் திடீரென மு.க.அழகிரி கோஷ்டி பக்கமாக சமீபகாலமாக குஷ்பு சாய ஆரம்பித்ததாகவும் தகவல்கள் வந்தன. இதனால் ஸ்டாலின் தரப்பினரின் அதிருப்திக்கு உள்ளார்.
சொந்தக் கட்சியினரே தாக்கும் அவலம்
தற்போது போகும் இடமெல்லாம் சொந்தக் கட்சியினராலேயே தாக்கப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் குஷ்பு. வாகை சந்திரசேகரின் காட்டமான அறிக்கைக்குப் பின்னரே குஷ்பு வீடு தாக்கப்பட்டது. அவரையும் திருச்சியில் வைத்து தாக்கியுள்ளனர். செருப்பும் வீசப்பட்டுள்ளது.
திமுகவிலிருந்து விலகுவாரா?
திமுகவினரின் செயலால் குஷ்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது வீட்டை திமுகவினர் தாக்கியதும் அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே அவர் திமுகவிலிருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.