'விஸ்வரூபம்': விஜய்காந்தை தொடர்ந்து- கருணாநிதி மீதும் ஜெ. அவதூறு வழக்கு!!
கடந்த 31-ந்தேதி முரசொலி நாளிதழில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய 'பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது' என்ற கடிதத்தில் விஸ்வரூபம் படம் சம்பந்தப்பட்ட அரசின் நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
அதில் விக்ரம் பட வெளியீட்டின் போது கமல் குறித்து அன்றைய முதல்வர் எம்ஜிஆருக்கு ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியதாக கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.
இதனை முதல்வர் ஜெயலலிதா மறுத்தார். ஆனால் கருணாநிதியோ தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கருணாநிதியின் கடிதம் மற்றும் கருத்து முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி அவரது சார்பில் சென்னை நகர முதன்மை அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக இதே விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு போட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.