ராஜபக்சே இந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி ஏன் வருகிறார்? பலே ராஜதந்திர வியூகம்!

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையில் டெல்லி பயணம் என்பது இல்லாத ஒன்றாகவே உருமாறி வருகிறது. ஆம்.. ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் டெல்லியில் கோலோச்சக் கூடிய அல்லது கோலோச்சும் வாய்ப்பு இருக்கக் கூடிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் தயவு இனி தேவை இல்லை என்பதுதான்.. ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளுமே இந்திய அரசியலை தீர்மானிக்கக் கூடிய சக்திகள் என்ற வலுவை இழந்துபோய்விட்டன. இனிவரும் காலங்களில் இவை மேலும் பலமிழக்கவே வாய்ப்புகளே அதிகம்.
இந்திய அரசியலை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக மாநிலங்கள்தான் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன. மத்திய அரசு என்பது மாநிலக் கட்சிகள் நினைக்கும் வரைதான் பதவியில் இருக்க முடியும். இல்லையெனில் கவிழ்ந்தே ஆக வேண்டிய நிலைமைதான் இருக்கிறது. இந்த நிலைமையைத்தான் ராஜபக்சேவும் உணர்ந்து இதற்கேற்ப தமது காய்களையும் நகர்த்தி வருகிறார்.
ராஜபக்சே அண்மைக்காலமாக வந்து சென்ற மாநிலங்கள் 3. மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், பீகார். இந்த மூன்று மாநிலங்களிலுமே கணிசமான லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக 3 மாநில முதல்வர்களுடனும் ராஜபக்சே தமது நல்லுறவை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். தமது ஒவ்வொரு பயணத்தின் போதும் மாநில முதல்வர்களை சந்தித்துப் பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்படி அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட மாநில முதல்வர்களை நேரில் சந்தித்துப் பேசி நல்லுறவை வளர்ப்பதன் மூலம் தமக்கு ஆதரவான லாபியை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது ராஜபக்சேவின் வியூகமாக சொல்லப்படுகிறது.
ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் இந்திய மாநில முதல்வர்களை தம் பக்கம் வளைத்துப் போடுவதன் மூலம் டெல்லியில் அமைய இருக்கும் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சிகள் தமக்கு எதிராக எந்த ஒரு நிலையையும் மேற்கொள்ளாத வகையில் தடுத்துவிடலாம் என்பதுதான் ராஜதந்திரமாக வைத்திருக்கிறார்.
இதனடிப்படையில் ராஜபக்சேவின் அடுத்த பயணம், அனேகமாக உத்தரப்பிரதேசத்தின் சாரநாத்தாக இருக்கலாம் அல்லது ஒடிஷாவின் புவனேஸ்வராக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஆமா நம்மூர் அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிடுகிறாரே!












Click it and Unblock the Notifications