அப்சல் குருவைத் தொடர்ந்து அடுத்த தூக்கு பல்வந்த் சிங் ரஜோனா..?
டெல்லி: லோக்சபா தேர்தல் வேகமாக நெருங்கி வரும் நிலையில், அடுத்தடுத்து ஒவ்வொருவராக தூக்கிலிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரைத் தொடர்ந்து அடுத்து பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பல்விந்த் சிங் ரஜோனா தூக்கிலிடப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை எந்த அரசிலும் இல்லாத அளவுக்கு அடுத்தடுத்து தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஆனால் இதுவரை நிறைவேற்றிய இரண்டு தூக்குத் தண்டனைகளையும் மிகவும் ரகசியமாக நிறைவேற்றிய விதம்தான் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
கடும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்த கசாப் மற்றும் அப்சல் குரு ஆகியோர் 3 மாத இடைவெளியில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதையடுத்து அடுத்து யாருக்குத் தூக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த் சிங் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பல்வந்த் சிங் ரஜோனாதான் அடுத்து தூக்கிலிடப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டே உயிர் தப்பினார்
ரஜோனா கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியே தூக்கிலிடப்படுவதாக இருந்தார். ஆனால் அப்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும், அவரது மகனும், சிரோமணி அகாலிதள தலைவருமான சுக்பீர் சிங் பாதலும் சேர்ந்து அப்போதைய குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்து தூக்குத் தண்டனையை தள்ளிப் போடுமாறு மன்றாடினர். இதையடுத்து கடைசி நேரத்தில் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
குரு தூக்கு குறித்து அகாலிதளம் அமைதி
இந்த நிலையில் தற்போது அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது குறித்து அகாலிதளம் கட்சி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக மெளனம் காத்தது. அடுத்து ரஜோனாவுக்குத்தான் தூக்கு கயிறு வரும் என்பதை ஊகித்தே அகாலிதளம், குரு தூக்கிலிடப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பாஜக மீது பாயும் காங்கிரஸ்
அதேசமயம், அகாலிதளத்தின் கூட்டணிக் கட்சியான பாஜக மீ்து பாய்ந்துள்ளது காங்கிரஸ். அப்சல் குரு தூக்கு குறித்து வாய் கிழியப் பேசி வரும் பாஜக, அகாலிதளம், ரஜோனாவின் தூக்கை நிறுத்தத் துடிப்பது குறித்து ஏன் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் உள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக கேட்டுள்ளது.
2007ம் ஆண்டு விதிக்கப்பட்ட தண்டனை
ரஜோனாவுக்கு 2007ம் ஆண்டே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. அவருக்கும் ஜக்தார் சிங் ஹவாராவுக்கும் சிபிஐ கோர்ட் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு 2010ம் ஆண்டு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் அப்பீலுக்குப் போனது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ரஜோனாவுக்கு தண்டனையை உறுதி செய்தது. அதேசமயம், ஹவாராவின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பஞ்சாபில் தீவிரவாதத்தை ஒழித்தவர் பியாந்த் சிங்
பஞ்சாபில் பியாந்த் சிங் முதல்வராக இருந்தபோதுதான் அங்கு தலைவிரித்தாடி வந்த தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. டிஜிபியாக இருந்த கே.பி.எஸ். கில் உதவியுடன் தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார் பியாந்த் சிங். இதனால்தான் அவரை மனித வெடிகுண்டு மூலம் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி காலிஸ்தான் தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். திலவார் சிங் என்பவர் மனித வெடிகுண்டாக மாறி இதைச் செய்தார்.
மனித வெடிகுண்டாக தயாராக இருந்தவர் ரஜோனா
இந்த தாக்குதல் திட்டத்தின் மூளையாக இருந்தவர் ஹவாரா. அதேசமயம், திலவாரா சிங்கின் திட்டம் தோல்வியடைந்தால், மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்ய தயார் நிலையில் இருந்தவர் ரஜோனா என்பது குறிப்பிடத்தக்கது.