1984-ல் இதே பிப்ரவரி...இதே திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்ட காஷ்மீரி!!

அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் தொடர்ந்து 3 நாள் ஊரடங்கு உத்தரவில் இருண்டு கிடக்கிறது ஜம்மு காஷ்மீர். அச்சு ஊடகங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ப்ராட்பேண்ட் இணைப்பை தவிர இணைய இணைப்பு எதுவும் இல்லை. தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆண்டு தோறும் 'பதற்றத்துக்குள்ளாகும்' காஷ்மீர் பிரிவினைவாதிகளால் தியாகியாக போற்றப்படுகிற தீவிரவாதி மக்பூல் பட் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது!
இந்த மக்பூல் பட்டுக்கும் அப்சல் குருவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு! முதலில் மக்பூல்பட் பற்றி பார்க்கலாம்...
மக்பூல் பட்
1966-ல் இந்திய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி, ஒரு போலீசாரின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக மக்பூல் பட் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மக்பூல் பட், சுரங்கம் தோண்டி தப்பித்து பாகிஸ்தானுக்கு சென்று பிடிபடுகிறார். பின்னர் விடுவிக்கப்படுகிறார். இந்த வழக்கில் மக்பூல் பட்டுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
1971-ம் ஆண்டு பயணிகள் விமானத்தை லாகூருக்கு கடத்திச் செல்லப்படுகிறது. இதில் மக்பூல் பட் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஈடுபட்டது தெரியவர பட்டை பாகிஸ்தான் கைது செய்தது. பின்னர் விடுதலையான அவர் அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார். அவர் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1980களில் தமது தூக்கு தண்டனைக்கு எதிராக அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்கிடம் கருணை மனு அளித்திருந்தார் மக்பூல்பட்.இந்த நிலையில் 1984-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இங்கிலாட்ந்ஹின் பிர்மிங்ஹாமில் இந்திய தூதரக அதிகாரி ரவீந்தர மஹாத்ரே கடத்தப்படுகிறார். அவரை விடுவிக்க 2 நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. ஒன்று 1 மில்லியன் பவுண்டை இந்திய அரசு தர வேண்டும் மற்றொன்று மக்பூல் பட் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான். இதனால் அவரைக் கடத்தியதும் மக்பூல்பட்டின் அமைப்புதான் என்பது உறுதியானது.
ஆனால் பிப்ரவரி 6-ந் தேதி ரவீந்திர மஹாத்ரே, பிரிமிங்ஹாமில் கொல்லப்படுகிறார். இதனால் மக்பூல் பட்டின் கருணை மனு நிராகரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 11-ந் தேதி டெல்லி திஹார் சிறையில் மக்பூல் பட் தூக்கிலிடப்படுகிறார். அவரது உடல் திஹார் சிறையிலேயே புதைக்கப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்சல் குரு...
மக்பூல் பட் உருவாக்கிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பில் சிறிது காலம் உறுப்பினராக இருந்தவர் அப்சல் குரு. இவரும் பாகிஸ்தானுக்குப் போய் ஆயுதப் பயிற்சி பெற்றுவிட்டு திரும்பினார்.
மக்பூல்பட் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தியதால் தூக்கிலிடப்பட்டார். அப்சல் குரு, இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் தொடுத்த அதாவது நாட்டுக்கு எதிரான போருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்குள்ளாகி தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.
மக்பூல் பட்டைப் போல இவரது உடலும் திஹார் சிறையிலேயே புதைக்கப்பட்டிருக்கிறது. தற்போது உடலை ஒப்படைக்க உறவினர்கள் கோரி வருகின்றனர்...
இந்த ஒற்றுமைகளுக்கு அப்பால்.. ஒரு கேள்வி எழாமல் இல்லை.. மக்பூல் பட் தூக்கிலிடப்பட்டு 5 ஆண்டுகள் கழித்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. தற்போது அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் எதிரொலி எப்படி இருக்குமோ என்ற அச்சமும் பரவிக் கிடக்கிறது.












Click it and Unblock the Notifications