பிராடுடன் ஃபேஸ்புக்கில் பிரண்டாகி, கைது செய்த மும்பை போலீஸ்!
தெற்கு மும்பை கல்பா தேவியில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையில் அகௌண்டன்டாக இருந்தவர் விஜய் சவுத்ரி. கடந்த டிசம்பர் மாதம் கடை உரிமையாளர் விஜயிடம் ரூ.20,000த்தை கொடுத்து வங்கியில் செலுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் ஓபரா ஹவுஸில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவுக்கு சென்றார். ஆனால் பணத்தை செலுத்தாமல் ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து கடை உரிமையாளர் வி.டி. ரோடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். விஜயை தொடர்புகொள்ள முயன்றபோதெல்லாம் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. விசாரணையில் விஜய் ஃபேஸ்புக்கில் அடிக்கடி வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் ஃபேஸ்புக்கில் ஒரு அகௌண்ட் துவங்கி தங்களை ஒரு பெண் என்று கூறி அவருக்கு பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளனர்.
அவரும் யாரோ ஒரு பெண் என்று நினைத்து அதை ஏற்றார். இதையடுத்து போலீசார் சில நாட்களாக விஜயுடன் ஃபேஸ்புக்கில் பெண் போன்று பேசி வந்தனர். தன்னுடன் ஃபேஸ்புக்கில் பேசுவது போலீஸ் என்று தெரியாத விஜய் தன்னுடைய புதிய செல்போன் நம்பரை கொடுத்தார். இதையடுத்து போலீசார் விஜயை மத்திய மும்பையில் உள்ள லோயர் பரேல் பகுதிக்கு வருமாறு கூறினர். யாரோ ஒரு பெண்ணை சந்திக்கும் மகிழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை அங்கு வந்த விஜயை போலீசார் கைது செய்தனர்.