பாண்டியை காலி செய்ய திட்டமிட்ட 'பொட்டு': முந்திக் கொண்ட 'அட்டாக்'!
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ் கடந்த 31ம் தேதி மதுரை சத்யசாய் நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த சபா என்ற சபாரத்தினம் (25), சந்தானம் (25), ராஜூ என்ற நாகமுருகன் (25), லிங்கம் (24), செந்தில் (25), சேகர் (24), கார்த்தி க்(24) ஆகிய 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவர்கள் அடாவடி ஆசாமியான அட்டாக் பாண்டியின் ஆட்கள் ஆவர். அட்டாக் பாண்டி குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் சரணடைந்த 7 பேரையும் 6 நாட்கள் தங்களது காவலில் எடுத்து மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை இன்று 3 மணியுடன் முடிகிறது. இதையடுத்து அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகின்றனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட டாடா ஏஸ் மினி வேன், பட்டா கத்திகள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கும்பலுக்கு சபாரத்தினம் தான் முக்கிய மூளையாக இருந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சபாரத்தினம், அட்டாக் பாண்டியின் முக்கிய கூட்டாளி ஆவான். எனவே இந்த கொலையில் அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
பொட்டு சுரேஷ் அழகிரியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அதனால் திமுக ஆட்சியின் போது மிகுந்த செல்வாக்கு மிகுந்த நபராக வலம் வந்தார். தான் நினைத்தை சாதிக்கும் பொட்டு சுரேஷுக்கு, நண்பர்களை விட மறைமுக எதிரிகள் அதிகம் இருந்தனர். குறிப்பாக காண்டிராக்ட் தொழிலிலும், திமுகவிலும் பல எதிரிகள் இருந்தனர்.
திமுக ஆட்சியின் போது கட்டப்பஞ்சாயத்து, நிதி நிறுவன மோசடி போன்ற புகாரில் சிக்கிய அட்டாக் பாண்டியிடம் இருந்து வேளாண் விற்பனை குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் மு.க.அழகிரியை சந்திப்பதற்கும் அட்டாக் பாண்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு காரணம் பொட்டு சுரேஷ் தான் என்று எண்ணிய அட்டாக் பாண்டி, அவருடன் மோதி வந்தார்.
இந் நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பெட்டு சுரேஷ் போலீசில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அட்டாக் பாண்டியை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்தார்.
இந் நிலையில் பொட்டுவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். சிறையில் இருந்து வெளியே வந்த பொட்டு சுரேஷ், மு.க.அழகிரியை சந்திக்கவில்லை. எனவே இருவருக்கும் பிரச்சனை என்று கூறப்பட்டது.
இதற்கிடையே அட்டாக் பாண்டியால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என நினைத்த பொட்டு அவரைத் தீர்த்துக் கட்ட ஒரு கும்பலுக்கு அட்வான்ஸ் தந்ததாகவும் தெரிகிறது. இந்தக் கும்பல் அட்டாக் பாண்டியின் உறவினர்கள் என்பதும், இவர்களுக்கும் அட்டாக் பாண்டிக்கும் குடும்பப் பகை இருந்ததை வைத்து, இவர்களது உதவியை பொட்டு நாடியதாகவும் தெரிகிறது.
ஆனால், இவர்கள் இந்தத் தகவலை அட்டாக் பாண்டிக்கு பாஸ் செய்துவிட்டதாகவும், இதையடுத்தே பொட்டுவை தீர்த்துக் கட்ட அட்டாக் பாண்டி முடிவு செய்ததாகவும் தெரிகிறது.
இந் நிலையில் கடந்த மாதம் (ஜனவரி) 27ம் தேதி பொட்டு சுரேஷ், மு.க.அழகிரியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதனால் தன்னை அழகிரியிடமிருந்து பொட்டு மீண்டும் பிரித்துவிடுவார் என்று அஞ்சிய அட்டாக், பொட்டு சுரேஷை மு.க.அழகிரியின் பிறந்தநாளன்றே (ஜனவரி 30ம் தேதி) கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஆனால் பொட்டு சுரேஷ் 29ம் தேதி கொடைக்கானல் சென்று விட்டார். அதனால் 30ம் தேதி கொலையை செய்ய முடியவில்லை. 31ம் தேதி பொட்டு சுரேஷ் மீண்டும் மதுரை வந்துள்ளார். இரவில் அவர் வீடு திரும்பும் வழியில் கொலை செய்துள்ளனர்.
சாலையில் அவரை கொலை செய்ய முடியாவிட்டால் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கொல்லவும் திட்டமிட்டு இருந்தனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் அட்டாக் பாண்டி பிடிபட்டால் முக்கிய குற்றவாளி யார் என்பது தெரிந்து விடும். மேலும் இந்த கொலை தொடர்பாக அட்டாக்பாண்டியின் உறவினர்களான பிரபு, பிரவீன் மற்றும் நண்பர் ரூபன் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்கள் 3 பேர் மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளதும், குறிப்பாக பிரவீன் மீது பஸ்சில் துப்பாக்கி கொண்டு போன வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.