தை அமாவாசை: கொடுமுடியில் முன்னோர்களுக்கு திதி வழிபாடு
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேஸ்வரர் கோயில் பரிகார ஸ்தலமாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துவிட்டு சாமியை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
நேற்று முன் தினம் மதியம் முதல் தை அமாவாசை தொடங்கியதால் பக்தர்கள் காலை முதல் மாலை வரை வந்து சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு வெள்ளிகவசம் சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து சாமி தரிசனம் செய்தனர். காவிரி ஆற்றில் மிக குறைந்த அளவு கூட தண்ணீர் இல்லை என்பதால் தேங்கிய நீரில் பக்தர்கள் குடம், வாளி போன்றவைகளை பயன்படுத்தி குளித்தனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கொடுமுடி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.