இத்தாலிய ஹெலிகாப்டர் ஊழல்: முன்னாள் விமானப் படை தலைவர் தியாகிக்கு தொடர்பு!
டெல்லி: இத்தாலி நிறுவனத்திடம் இருந்து இந்தியா ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த ஊழல், ரூ. 470 கோடி லஞ்ச விவகாரத்தில் முன்னாள் விமானப் படைத் தளபதி எஸ்.பி.தியாகிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், சோனியா காந்தி, அத்வானி போன்ற முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பான பபயணத்துக்காக வழக்கமாக ஹெலிகாப்டர்களை வழங்குவது இந்திய விமானப் படையின் Communication Squadron பிரிவாகும்.

கருப்புப் பூனை படை தந்த நெருக்கடி:
இதில் செல்லும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கருப்புப் பூனைப் படை எனப்படும் spcial protection group (SPG) பிரிவின் பணியாகும்.
வழக்கமாக ரஷ்யாவின் எம்.ஐ. ரக ஹெலிகாப்டர்களைத் தான் முக்கிய பிரமுகர்களுக்காக விமானப் படை பயன்படுத்தி வந்தது. ஆனால், இதைவிட மிகச் சிறந்த எதிரிகளின் ஏவுகணைகளையும் ஏமாற்றிவிட்டுப் பறக்கக் கூடிய நவீன ஹெலிகாப்டர்களை உடனே வாங்குமாறு SPG மத்திய அரசுக்கு நெருக்கடி தந்தது.

கேள்வி எழுப்பிய பிரணாப் முகர்ஜி:
இதையடுத்து 12 நவீன ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்து, இது தொடர்பான பணியை விமானப் படையிடம் ஒப்படைத்தது.
முதலில் இவ்வளவு செலவு செய்து ஹெலிகாப்டர்களை வாங்க வேண்டுமா என்று அப்போதைய நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜி கேள்வி எழுப்பினார். ஆனால், விமானப் படையும் கருப்புப் பூனைப் படையும் மிகவும் நெருக்கடி தந்ததால் இதை அவர் அனுமதித்தார்.

ரூ. 470 கோடி லஞ்சம்:
இதையடுத்து இத்தாலிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் இருந்து ரூ. 3,546 கோடியில் 12 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படை வாங்கியது.
இதில் ரூ. 470 கோடி அளவுக்கு லஞ்சம் கைமாறியதாக இத்தாலிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, இந்த ஹெலிகாப்டரை இந்திய அரசை வாங்கச் செய்ய இத்தாலிய நிறுவனம் இந்தியாவில் யாருக்கோ இந்த லஞ்சத்தைக் கொடுத்துள்ளது என்று இத்தாலிய அரசு குற்றம் சாட்டியது.

இந்தியாவில் யாருக்கு லஞ்சம்?:
மேலும் இது தொடர்பாக பின்மெக்கானிகாவின் தலைவர் கிஸ்பி ஓர்சி, அகஸ்டா வெஸ்ட்லேண்டின் தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரை இத்தாலி நேற்று கைது செய்தது.
இந் நிலையில் இந்தியாவில் யாருக்கு இந்த லஞ்சம் தரப்பட்டது என்ற விவரத்தையும் இத்தாலிய அரசே லீக் செய்துள்ளது.

முன்னாள் விமானப் படைத் தளபதி எஸ்.பி.தியாகி:
முன்னாள் இந்திய விமானப் படைத் தளபதியான எஸ்.பி.தியாகியின் 3 உறவினர்கள் தான் இதில் இடைத்தரகர்களாக இருந்து லஞ்சம் வாங்கியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்துக்கு சாதகமாக சில விதிகளையும் இவர்கள் திருத்தியுள்ளனர்.
விமானப் படையின் அனுமதியோடு தான் இதை கருப்புப் பூனைப் படையினருக்காக மத்திய அரசு வாங்கியது. இந்த ஹெலிகாப்டர்களை வாங்கலாம் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது விமானப் படை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலி, டோஸ்கோ, சந்தீப் தியாகிக்கு 100,000 யூரோ:
இந்த லஞ்சம் குறித்து இத்தாலிய போலீசார் பஸ்டோ அர்சிஸியோ நகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 64 பக்க அறிக்கையில், தியாகி மீதும் அவரது 3 உறவினர்களான ஜூலி, டோஸ்கோ, சந்தீப் தியாகி ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர்களை இந்திய அரசு வாங்க முக்கியக் காரணமாக இருந்தவர் தியாகி தான். அவர் தான் 2010ம் ஆண்டில் இந்த 'டீலை' பின்மெக்கானிகா நிறுவனத்துக்கு சாதகமாக திருப்பினார். இதற்காக தியாகிக்கும் லஞ்சம் தரப்பட்டது.
அவரது உறவினர்களான ஜூலி, டோஸ்கோ, சந்தீப் தியாகி ஆகியோருக்கு முதல் கட்டமாக 100,000 யூரோக்களை இரு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் அதிகாரிகள் கொடுத்தனர்.

'டீல்' நடத்திய 2 அமெரிக்கர்கள்:
இந்த ஆர்டரைப் பெறுவதற்காக தியாகியின் உறவினர்களுக்கு நெருக்கமான அமெரிக்கரான குய்டோ ரால்ப் ஹஸ்சேக் மற்றும் கார்லோ கெராஸா ஆகியோரின் உதவியை அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் நாடியது. அவர் மூலமாகவே இந்த டீல் பேசி முடிக்கப்பட்டது.
இதற்காக இந்த இருவருக்கும் கூட 400,000 யூரோ கன்சல்டன்சி பீஸ் என்ற பெயரில் தந்துள்ளது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம். இதில் தான் 100,000 யூரோக்கள் தியாகியின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் மூன்று பேருக்கு போய்ச் சேர்ந்துள்ளது.

பறக்கும் உயரத்தையே மாற்றி டெண்டர்!!!!!:
இதையடுத்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களும் இந்திய விமானப் படையின் டெண்டரில் இடம் பிடிக்கும் அளவுக்கு சில விதிமுறைகள் மாற்றப்பட்டன. முதலில் 18,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்கள் தான் வேண்டும் என்று தனது டெண்டரில் விமானப் படை கூறியிருந்தது. ஆனால், 15,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களே போதும் என்று டெண்டர் மாற்றப்பட்டது. காரணம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் 15,000 அடி உயரத்துக்கு மேல் பறக்கும் திறன் அற்றவையாகும்.
வாங்கிய காசுக்காக திறன் குறைந்த ஹெலிகாப்டர்களை கூட டெண்டரில் இடம் பிடிக்க வைத்து, அதை வாங்கவும் செய்துள்ளனர் இடைத் தரகர்களான தியாகியின் உறவினர்கள்.

என்ஜினை வைத்து சாதகம்:
மேலும் ஒரு என்ஜினில் அல்லது இரு என்ஜின்களிலும் கோளாறு ஏற்பட்டாலும் சமாளிக்கும் திறன் கொண்டதாக ஹெலிகாப்டர்கள் இருக்க வேண்டும் என்ற புதிய விதியும் டெண்டரில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், உலகின் முன்னணி ஹெலிகாப்டர்களில் 3 என்ஜின்கள் கொண்ட ஒரே ஹெலிகாப்டர் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் தான். இதன்மூலம் இது தான் மிகச் சிறந்த ஹெலிகாப்டர் என்பது போல காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு இத்தாலிய அரசு பஸ்டோ அர்சிஸியோ நகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

மறுக்கும் தியாகி:
ஆனால், இதை தியாகி மறுத்துள்ளார். நான் விமானப் படைத் தலைவராக இருந்தது 2004 முதல் 2007 வரை தான். நான் பதவி விலகி 3 ஆண்டுகள் கழித்துத் தான் இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியது. இதனால் நான் தான் இதை வாங்க வைத்தேன் என்பது தவறான தகவல் என்றார்.
இந் நிலையில் இந்த டீலில் முக்கிய இடைத் தரகர்களான இருந்த குய்டோ ரால்ப் ஹஸ்சேக் மற்றும் கார்லோ கெராஸா ஆகிய இருவரும் சுவிட்சர்லாந்தில் இருப்பதால் நேற்று கைது செய்யப்படவில்லை.
பின்மெக்கானிகாவின் தலைவர் கிஸ்பி ஓர்சி, அகஸ்டா வெஸ்ட்லேண்டின் தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரைத் தான் இத்தாலி நேற்று கைது செய்தது.

சிபிஐயும் மத்திய அரசும்:
பதவி விலகிவிட்ட நிலையிலும் விமானப் படையின் மீது அதிகாரம் செலுத்தி இந்த ஹெலிகாப்டர்களை தியாகி வாங்க வைத்தது எப்படி என்பதை இத்தாலிய அரசு விளக்கவில்லை. இது குறித்து விசாரிக்க வேண்டியதும், தவறு செய்திருந்தால் தியாகி மற்றும் அவரது 3 உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்திய அரசு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளதோடு இந்த வழக்கை சிபிஐயிடமும் ஒப்படைத்துள்ளது.












Click it and Unblock the Notifications