ஆசிட் வீச்சில் பலியான வினோதினி வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம்
காரைக்காலைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் வினோதினி. சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக பணியாற்றினார். கடந்த தீபாவளியின்போது ஊருக்கு சென்றவர் மீது அவரை ஒருதலையாக காதலித்த கூலித் தொழிலாளி சுரேஷ் ஆசிட் ஊற்றினார். இதில் வினோதினி படுகாயம் அடைந்ததோடு அவரது கண் பார்வையும் பறிபோனது.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் மீது ஆட்சி வீசிய சுரேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விரைந்து முடிக்க புதுவை அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வினோதினியின் வழக்கை விரைவு நீதிமன்றம் அமைத்து விரைந்து முடிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அவர்களின் கோரிக்கையை ஏற்ற புதுவை அரசு விரைவு நீதிமன்றம் அமைப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. புதுவை நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் விரைவு நீதிமன்றம் அமைப்பது குறித்து அதனிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
அதனால் விரைவு நீதிமன்றம் அமைப்பது குறித்து புதுவை அரசு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மனு அனுப்பு முடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வர் ரங்கசாமி சட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
இது குறித்து புதுவையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும், திமுக முன்னாள் எம்.பியுமான சி.பி. திருநாவுக்கரசு கூறுகையில்,
விரைவு நீதிமன்றம் அமைத்தால் 15 நாட்களில் இருந்து 1 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கலாம். அதற்கு போலீசார் ஒத்துழைக்க வேண்டும். விரைவு நீதிமன்றத்தை காரைக்காலிலோ, புதுவையிலோ அமைக்கலாம். புதிதாக அமைக்கப்படும் நீதிமன்றத்திற்கு புதுவை மாநில நீதிபதி ஒருவரை நியமிக்கலாம். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஆசிட் வீச்சு வழக்குப் பதிவு செய்த போலீசார் சுரேஷ் மீது 188 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்நிலையில் வினோதினி இறந்தததால் அந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. எனவே அதற்குரிய புதிய குற்றப்பத்திரிக்கை பழைய குற்றப்பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும்.