செம்மொழி தமிழாய்வு நிறுவன ஊழியர்கள் இன்று ஒப்பாரி, நாளை பாடை கட்டிப் போராட்டம்
சென்னை தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பணியாளர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம், தினக்கூலி முறையை மாற்றியமைத்தல், 2009ம் ஆண்டிற்குப் பின்பு ஊதிய உயர்வு வழங்காமல் இருக்கும் 72 சதவீத ஊதியத்தை முன் தேதியிட்டு வழங்குதல் ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து அறப் போராட்டம் துவங்கியது.
அன்று முதல் மனித சங்கிலி போராட்டம், கண்ணில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு போராட்டம், வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு போராட்டம், பிச்சையெடுக்கும் போராட்டம், தெய்வங்களிடம் முறையிடும் போராட்டம் போன்ற பல்வேறு தொடர் அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒன்பதாவது நாளான இன்று கண்ணீர் சிந்த ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர். பத்தாவது நாளான நாளை பாடைகட்டிப் போராட்டம் நடத்தப்படுகிறது.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அறவழியில் போராட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.