மகளைக் காணோம் என்று அப்பா புகார்.. இல்லை என்கிறார் அம்மா
தர்மபுரி: மகளை யாரோ கடத்தி விட்டதாக தந்தை போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று தாயார் கூறியதால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரியை அடுத்த இண்டமங்கலத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு பழனியம்மாள், எல்லம்மாள் என இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பழனியம்மாளுக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவி எல்லம்மாளுக்கு 17 வயதில் காவேரி என்ற மகளும் உள்ளனர்.
ஏழு ஆண்டுக்கு முன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக எல்லம்மாள் தனது கணவனை பிரிந்து தனது மகளுடன் ஈரோட்டில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் காவேரி பருவம் அடைந்தார். இதனால் தனது மகளின் பாதுகாப்பு கருதி எல்லம்மாள் அவரை தனது கணவர் சின்னசாமியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். தந்தையுடன் வசித்த காவேரி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தார். கடந்த, 1-ம் தேதி பள்ளிக்கு சென்ற காவேரி வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மகளை கடத்தி சென்று விட்டார்கள், என சின்னசாமி கடந்த, ஒன்றாம் தேதி கிருஷ்ணபுரம் போலீஸிஸ் புகார் செய்தார். போலீஸார் காவேரியைத் தேடிவந்தனர். இந்த நிலையில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட காவேரியுடன் அவரது தாயார் எல்லம்மாள் காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு சின்னச்சாமியுடன் அவர் வாக்குவாதம் செய்தார்.மேலும் தனது மகளை யாரும்கடத்தவில்லை என்றும்போலீஸாரிடம் அவர் கூறினார்.
தன்னுடைய மகள் ஈரோட்டில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்ததாகவும், சொத்தில் மகளுக்கு பங்கு கொடுப்பதை தவிர்க்கவே சின்னசாமி இது போன்று கடத்தல் புகார் கொடுத்ததாக எல்லம்மாள் போலீஸில் கூறினார்.
அதன் பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையின்போது தனது தாயுடன் போக காவேரி விருப்பம் தெரிவித்ததால் அவருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.