காஷ்மீரிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு காவு கொடுக்கப் போவது வீரப்பன் கூட்டாளிகளை?

அஜ்மல் கசாப்பின் மரணம் இந்தியாவில் வரவேற்பையே பெற்றது. காரணம், பாகிஸ்தானிய தீவிரவாதியான இவனும் இவனது சகாக்களும் மும்பையில் புகுந்து தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதையும், அதை உலகமே டிவியில் நேரடியாகப் பார்த்த காட்சிகளையும் யாரும் இன்னும் மறக்கவில்லை. இப்படிப்பட்ட கசாப் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இதுவே பெரும் சர்ச்சையானது. இறுதியில் சில மாதங்களுக்கு முன்பு அவன் தூக்கிலிடப்பட்டான்.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட, நீண்ட காலமாக காத்திருந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் கசாப்பைப் போலவே அப்சல் குருவையும் ரகசியமாக தூக்கிலிட்டது.
மேலும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நெருக்குதலை சமாளிக்கவும், லோக்சபா தேர்தலை மனதில் கொண்டும் இந்த இருவரையும் மத்திய அரசு அவசரம் அவசரமாக தூக்கிலிட்டதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது.
அதுபோக ஜம்மு காஷ்மீர் முதல்வரும், ஏன் ராஜீவ் கொலையாளிகளைத் தூக்கிலிடவில்லை. பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் கொலையாளியை ஏன் தூக்கிலிடவில்லை என்று கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மேலும் மத்திய அரசு பாரபட்சமாக நடப்பதாகவும், செலக்டிவ்வாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன. ஆனால் இதை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார்ஷிண்டே மறுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், வீரப்பன் கூட்டாளிகளுமான நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் நால்வரும் தற்போது கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நால்வருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களை வைத்து தமிழகத்தில் நாளை முதல் பரபரப்பு கிளம்பும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இவர்களை வைத்து சாதி ரீதியில் பிரச்சினை கிளப்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் 3 தமிழர்களுக்கு உதவக் கோரி தமிழகத்தில் எழுந்த பெரிய அலையைப் போல இந்த வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆதரவான குரல் எழுமா என்பதும் ஐயம்தான்.
காரணம், தற்போது தமிழகத்தி்ல இருப்பது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. இதே ஜெயலலிதா தலைமையிலான கடந்த ஆட்சிக்காலத்தில்தான் வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டான். எனவே ஜெயலலிதா தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தலையிடாது என்பது திட்டவட்டமாகும்.
இருப்பினும் இன உணர்வு அடிப்படையில் இந்த நால்வருக்கும் ஆதரவாக தமிழகத்தில் குரல் எழலாம் என்று தெரிகிறது... அதே இன உணர்வு அடிப்படையில்தான் காஷ்மீரிகளை சமாதானப்படுத்த நான்கு வீரப்பன் கூட்டாளிகளை காவு கொடுக்க மத்திய அரசும் வேகமாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications