காவிரி: நடுவர்மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட தடை கோரி பிரதமரை சந்திக்கிறார் ஷெட்டர்
காவிரி பிரச்னை தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு தனது இறுதி தீர்ப்பை வெளியிட்டது. இந்த தீர்ப்பு கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படவில்லை.
தீர்ப்பினை அரசிதழில் வெளியிட வலியுறுத்தி பலமுறை தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை வரும் 20ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 4-ந் தேதி உத்தரவிட்டது.
இதனிடையே, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய அனைத்துக்கட்சிக் குழுவினர் பிரதமரிடம் மாநிலத்தின் தற்போதைய நிலையை விளக்கி கூற உள்ளதாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
தண்ணீர் தர முடியாது
தற்போதுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறந்துவிட முடியாது என்றும் ஷெட்டர் கூறியுள்ளார். கர்நாடகாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலிலும் உச்சநீதிமன்ற உத்தரவை மதித்தே காவிரியில் ஏற்கெனவே தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமரை சந்திக்கும் போது, நடுவர்மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்துவோம் என்றும் ஷெட்டர் கூறியுள்ளார்.