தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு இளம் பெண் பலியானார். மாவட்டம் தோறும் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 40 பேர் பலியாகினர். நெல்லை அரசு மருத்துவமனையில் இதற்காக சிறப்பு வார்டு திறக்கப்பட்டது. அங்கு மட்டும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 16,000 பேர் வரை டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர். இது தவிர தனியார் மருத்துவமனையிலும் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். நெல்லை, தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவியதால் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை எடுத்த கடும் முயற்சியால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்தது. நவம்பர் மாதம் பெய்த மழை காரணமாக காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியது. மேலும் சிக்கன் குனியாவும் இதனுடன் சேர்ந்து கொண்டது. பத்தமடையைச் சேர்ந்த சேக் மைதீன் மகள் நாகூர் பீவி, பணகுடியைச் சேர்ந்த முருகன் மகள் முத்து ஈஸ்வரி ஆகிய இரண்டு குழந்தைகள் காயச்சல் காரணமாக இறந்தனர். மர்ம காய்ச்சலுக்கு ஜனவரி, பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் 12 பேர் பலியாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள செபத்தையாபுரம் சின்னபாலம் தெருவை சேர்ந்தவர் முருகேசன். தூத்துக்குடியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கவுரி சுகிர்தா. அவர் கடந்த 12ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குறையாததால் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு எலிசா பரிசோதனையில் கவுரி சுகிர்தாவுக்கு டெங்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.