நாடாளுமன்ற இரு அவைகளையும் உலுக்கிய ஹைதராபாத் குண்டுவெடிப்பு விவகாரம்
இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியவுடன் நேற்று மாலை ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து லோக்சபாவில் குண்டுவெடிப்புகளுக்கு உள்நாட்டு பாதுகாப்பில் மத்திய அரசு அஜாக்ரதையாக இருந்தது தான் காரணம் என்று கூறி பாஜகவினர் கோஷமிட்டனர்.
தெலுங்கு தேசம் கட்சியினரோ ஹைதராபாத் குண்டுவெடிப்புகள் குறித்த தெலுங்கு செய்தித்தாள்களை காண்பித்தனர். கடந்த 2 நாட்களாக நடந்த வேலைநிறுத்தத்தின்போது தங்கள் கட்சி ஆட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
திமுகவினரோ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவையின் நடுவே வந்து நின்று கொண்டு காண்பித்தனர். இதையடுத்து அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு 12 மணிக்கு அவை கூடி நடந்து வருகிறது.
ராஜ்யசபாவிலும் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதால் அவை பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.