ஜாக்கிரதையா இருங்க! தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்… எச்சரிக்கும் அமெரிக்கா!
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் அல் கொய்தா, அதன் ஆதரவு அமைப்புகள் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும், அமெரிக்கர்கள் அதிகம் கூடும் விளையாட்டுப் போட்டிகள், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் தாக்குதல்களை நடத்தலாம். குறிப்பாக விடுமுறை நாட்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம்.
இந்த தாக்குதல்கள் தற்கொலை படை, கடத்தல், குண்டு வீசுதல் என பல்வேறு முறைகளில் நடத்தப்படலாம்.
தெற்கு ஆசியாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்குள்ள அல் கொய்தா, தலிபான், பிரிவினைவாத குழுக்கள் போன்ற அமெரிக்காவின் ‘வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள்' பட்டியலில் உள்ள பல அமைப்புகள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
அமெரிக்காவின் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் உள்ள மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தீவிரவாத குழுக்களான ஹர்கத் -உல்-ஜிகாதி-இஸ்லாமி, ஹர்கத் உல் முஜாகிதீன், இந்தியன் முஜாகிதீன், ஜெயிசே-இ-மொஹமத், பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா ஆகியவை இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிரவாதிகள் மேற்கத்தியர்கள் அதிகம் கூடும் பொது இடங்களை குறி வைத்துள்ளனர்."என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.