மனம் பதற வைத்த நோ பயர் ஸோன் - டெல்லியில் வெளியிட்டது சேனல் 4!
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான கூடுதல் சாட்சியங்களும், ஆதாரங்களும் இதன் மூலம் வெளி உலகத்துக்கு அம்பலமாகி உள்ளன.
இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் போர் கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக் கட்டத்தை அடைந்தது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்தப் போரில் அப்பாவி பொது மக்கள் உள்பட ஒரு லட்சம் பேருக்கு மேல் பலியானார்கள்.
விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள், வீரர்கள், வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரண் அடைய வந்தவர்கள் என அனைவருமே மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இது பற்றிய வீடியோ மற்றும் படங்கள் அடங்கிய ஆவணப்படங்களை, பிரிட்டனைச் சேர்ந்த 'சேனல்-4' தொலைக்காட்சி பலமுறை வெளியிட்டு உலகை அதிர வைத்தது.
சில நாட்களுக்கு முன்னர் இந்த தொலைக்காட்சி, ரத்தத்தை உறைய வைக்கும் மேலும் ஒரு கொடூரக் காட்சியையும் வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை, சிங்கள படைகள் பிடித்து வைத்து, சாப்பிடுவதற்கு சில உணவுகளை கொடுத்து, பின்னர் அவனை நெஞ்சில் நேருக்கு நேர் சுட்டுக்கொன்ற காட்சிதான் அது.
உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய இந்த காட்சி, இலங்கை மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மேலும் ஒரு சாட்சியமாக அமைந்தது.
டெல்லியில்...
இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய போர் வெறியாட்டம் தொடர்பான இரண்டாவது ஆவணப்படத்தை (டாக்குமெண்டரி சினிமா) 'சேனல்-4' தயாரித்துள்ளது. 'நோ பயர் சோன்' (தாக்குதல்கள் நடத்தக்கூடாத பகுதிகள்) என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த சினிமா நேற்று டெல்லியில் உள்ள அரசியலமைப்புக் கழக அரங்கில் திரையிடப்பட்டது.
சர்வதேச பொது மன்னிப்பு சபையின் இந்திய கிளையும், அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவர்களை பரிந்துரைக்கும் குழுவும் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தது. 'இலங்கையின் கொலைக்களம்' என்ற பெயரில் 2 ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட இயக்குநர் கெல்லம் மெக்கரேதான் இந்த படத்தையும் தயாரித்து, இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை நேற்று பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி ராஜா, கண்ணீர் மல்க, இலங்கையை சர்வேதச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிறுத்தியே தீரவேண்டும், என்றார்.