சரமாரியாக அடித்து இடுப்பெலும்பை உடைத்து .ஊனமாக்கிய போலீஸ்… சென்னையில் ஒரு புகார்
சென்னை: சென்னையில் பொய் புகார் போட்டு போலீசார் தனது இடுப்பு எலும்பை உடைத்து ஊனமாக்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட நபர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரட்டூர் எல்லையம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கூறியிருப்பதாவது:
நான் சென்ட்ரிங் வேலை செய்கிறேன். எனக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4ம் தேதி காலை 10.30 மணிக்கு எல்லையம்மன் நகர் 2வது தெருவில் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தேன். அப்போது, பின்னால் வந்த காரின் டயர் எனது கால் விரலில் காயத்தை ஏற்படுத்தியது. வலியால் துடித்தேன். மீண்டும் பின்புறமாக காரை எடுத்து என் மீது மோத வந்தார் டிரைவர். பயத்தில் கார் மீதே விழுந்தேன். இதில், கார் கண்ணாடி சேதம் அடைந்தது.
இதுகுறித்து, கார் உரிமையாளர் சீனிவாசன், கொரட்டூர் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தார். இதைதொடர்ந்து போலீசார் என்னை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணை எதுவும் செய்யாமல் என்னுடைய உடைகள் அனைத்தையும் கழற்றினர். போலீசார் அடித்ததில் முதுகு எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு உடைந்தது. மயங்கி விழுந்தேன். லஞ்சம் வாங்கி கொண்டு போலீசார் என்னை அடித்துள்ளனர்.
எனவே என்னை தாக்கிய போலீசார் மற்றும் பொய் புகார் அளித்த சீனிவாசன், அவரது மனைவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.