திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- ஆட்சியை தக்க வைத்த ஆளும் கட்சிகள்
திரிபுராவில் கடந்த 14-ந் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் கடந்த 23-ந்தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 93%, மேகாலயாவில் 88%, , நாகலாந்தில் 83% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தன.
3 மாநிலங்களிலும் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் நேற்று எண்ணப்பட்டன.
திரிபுரா
இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழும் திரிபுரா மாநிலத்தில் இம்முறையும் இடதுசாரிகள் - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. தொடக்கம் முதலே இடதுசாரிகளின் ஆதிக்கம் நீடித்தது. இடதுசாரிகள் அணியில் மார்க்சிஸ்ட் கட்சி 46 தொகுதிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -1, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 2 தொகுதிகளையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வென்றுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு இடதுசாரிகள் முதலில் ஆட்சியைப் பிடித்தனர். தற்போது 5-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்திருக்கின்றனர் இடதுசாரிகள். திரிபுராவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து படுதோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாகாலாந்து
நாகலாந்தில் நிபியூரியோ தலைமையில் நாகா மக்கள் முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுரா போலவே நாகலாந்து மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி கிடைத்துள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கும் காங்கிரசுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
கடந்த 2008-ம் ஆண்டு தேர்தலில் நாகா மக்கள் முன்னணி 26 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. எனவே இம்முறை நாகா மக்கள் முன்னணியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். ஆனால் நாகலாந்து மாநில மக்கள் இம்முறையும் காங்கிரஸ் கட்சியை நிராகரித்து விட்டனர்.
நாகலாந்தின் 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களை நாகா மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கடந்த தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 8 தொகுதிகளில் சுயேட்சைகள் வென்றுள்ளனர்.
மேகாலயா
முகுல் சங்மா தலைமையில் மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கி இருந்தது.
எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 29 தொகுதிகளில் வென்றுள்ளது காங்கிரஸ். தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சி 8 தொகுதிகளில் வென்றுள்ளது.
இத்தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் லபாங், மராக், டோன்குபர் ராய் ஆகியோர் இத்தேர்தலில் வென்றுள்ளனர். தற்போதைய முதல்வர் முகுல் சங்மா 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.