பலாத்கார வழக்குகளில் தூக்கு விதிக்கப்படுவோரின் கருணை மனுக்களை பரிசீலிக்கக் கூடாது: பார்லி.நிலைக் குழ
டெல்லி: பலாத்காரம் செய்து படுகொலை செய்யும் குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி பரிசீலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்து இருக்கிறது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலன் இன்றி 16 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு இதுதொடர்பாக ஆய்வு செய்து தமது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்து உள்ளது. அதில் பலாத்காரம் செய்து படுகொலை செய்யும் குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவர்களது கருணை மனுக்களை பொதுவாக ஜனாதிபதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. இது தொடர்பாக கிரிமினல் சட்ட திருத்த மசோதாவில் சில மாற்றங்களை செய்வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கருணை மனுக்களை ஜனாதிபதி விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் போது அதற்கான காரணங்களை தெரிவிப்பது போல், குற்றவாளியின் கருணை மனு பரிசீலிக்கப்பட்டு மன்னிப்பு வழங்கப்பட்டாலோ, தண்டனை குறைக்கப்பட்டாலோ அதற்கான காரணங்களும் பகிரங்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.