ராஜபக்சே தலைக்கு ரூ.1 கோடி பரிசு: மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாகவும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் (MMBA) பீட்டர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும். மேலும், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமியை தமிழகத்தில் யார், எங்கு பார்த்தாலும், அவரை அந்த இடத்திலேயே அடிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் இறுதிக் கட்ட போரில் பங்கேற்ற இலங்கை ராணுவ தளபதிகள் உள்ளிட்டோரை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி தமிழகத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு சர்வதேச நீதிமன்றம் மூலமாக உரிய நிவாரணம் பெற்றுத்தர இந்தியா முயற்சிக்க வேண்டும். சர்வதேச உண்மை கண்டறியும் குழுவை இலங்கைக்கு அனுப்பி, 2009ம் ஆண்டிலிருந்து அங்கு நிகழ்ந்த போர்க்குற்ற அத்துமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.