எய்ட்ஸ் நோயாளியை விட்டு கடிக்க விடுவோம் என போலீஸார் மிரட்டினர்.. சசி பெருமாள் வேதனை
சேலத்தைச் சேர்ந்த சசி பெருமாள் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 34 நாட்களாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரை போலீஸார் கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சென்னை மெரீனா கடற்கரை காந்திசிலை அருகே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் சசி பெருமாள்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எனது உண்ணாவிரத்தை முடிக்கவில்லை. கட்டாயப்படுத்தி உண்ணாவிரதம் முடிக்கப்பட்டுள்ளது. என்னுடைய இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தாலும், அனைத்து மாவட்டங்களுக்கும் நடந்து சென்று, மதுவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஒருங்கிணைத்து 2014 ஜனவரி 30ல் மீண்டும் இதே சென்னை மெரீனா கடற்கரையில உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் தொடருவேன்.
எனக்கு மிரட்டல் வந்தது. நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, என்னை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாகவும், எய்ட்ஸ் நோயாளியை கடிக்க வைத்து கொலை செய்து விடுவதாகவும் போலீசார் மிரட்டினர் என்றார் சசி பெருமாள்.