கருணாநிதியுடன் 3 மத்திய அமைச்சர்கள் சந்திப்பு: எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
ஜெனிவா தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் இதற்கு சர்வதேச விசாரணை தேவை என்றும் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. இந்த திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால் மத்திய அரசில் இருந்து மட்டுமல்ல.. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறும் என்று கருணாநிதி எச்சரித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு மதிமுகவினர் கருப்புக் கொடி காட்ட முயற்சித்தனர். போலீசார் கருப்பு கொடி காட்ட முயன்றவர்களை கைது செய்தனர்.
பின்னர் மூன்று மத்திய அமைச்சர்களும் கருணாநிதியை அவரது சிஐடி காலனி வீட்டில் மாலை 5.40 மணிக்கு சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. .
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கருணாநிதியுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெரிவித்து இறுதி முடிவெடுப்போம் என்றார்.