பெங்களூர் போறீங்களா... இனிமேல் குஷ்பு இட்லி கிடைக்காது!
பெங்களூர்: நீங்க அடுத்த முறை பெங்களூர் போனால், அங்கு ஏதாவது ஹோட்டலில் போய் உட்கார்ந்து, இட்லி, வடைக்கு ஆர்டர் செய்தால், தட்டு வந்ததும் அதைப் பார்த்து நீங்கள் அதிர்ந்து போக நேரிடும்... ஆமாம், பெங்களூர் ஹோட்டல்காரர்கள், இப்போது இட்லி மற்றும் வடையின் சைஸை குறைத்து ஸ்லிம்மாகி விட்டார்கள்.
தென்னிந்தியா என்றாலே அரசியல்வாதிகளும், அரசியல்வியாதிகளும்தான் என்றாகி விட்டது. இருப்பினும் தென்னிந்தியாவின் பாரம்பரியங்களில் ஒன்றாக இன்றளவும் மிடுக்காக திகழ்வது அழகான அந்த இட்லியும், வடையும்.
அதிலும் குஷ்பு இட்லி என்றால் நம்மவர்களுக்கு ரொம்பவே இஷ்டம். ஆனால் இப்போது குஷ்பு இட்லியை திரிஷா இட்லியாக்கி விட்டார்கள் பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள்.
எடைக் குறைப்புக்கு உதவும் இட்லி
இட்லியில் எண்ணெய் எதுவும் சேர்க்கப்படுவதில்லை என்பதால் எடை குறைந்து ஸ்லிம்மாக வேண்டும் என்று நினைப்போர் தோசைக்குப் பதில் இட்லி சாப்பிடுவார்கள். ஆனால் அந்த இட்லியே இப்போது எடை குறைந்து போய் விட்டது பெங்களூரில்.
9 செமீ சுற்றளவு சுருங்கி இப்போது 6 செமீதான்.
பெங்களூர் ஹோட்டல்களில் தரப்படும் இட்லியின் சுற்றளவு இதுவரை 9 செமீட்டராக இருந்தது. தற்போது இதை 6 செமீட்டராக சுருக்கி விட்டனர்.
சாம்பாரும் தண்ணியாப் போச்சு
அதேபோல வடையின் சைஸையும் குறைத்து விட்டனர். அதை விடமுக்கியமாக இட்லி சாம்பாருடன் சேர்த்து்த தரப்படும் சாம்பாரை தற்போது மொட்டைத் தண்ணியாக்கி விட்டனராம்.
விலைவாசி உயர்வு தாங்க காரணம்
இப்படி இட்லி வடையின் எடையைக் குறைத்தும், சாம்பாரை தண்ணீராக்கியதற்கும் முக்கியக் காரணமாக விலைவாசி உயர்வைக் காரணம் காட்டுகிறார்கள் ஹோட்டல் உரிமையாளர்கள்.
கேஸ் விலை ஏறிப் போச்சே
வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது 1700 ஆக உயர்ந்து விட்டது. இது கட்டுப்படியாகவில்லை. உளுந்து விலையும் கிலோ 75க்கு விற்கிறது. இதையும் தாங்க முடியவில்லை. அரிசி விலையும் கிடுகிடுவென உயர்ந்து விட்டது என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.
வாடிக்கையாளர்கள் அதிருப்தி
இட்லி, வடை சாப்பிடும் நுகர்வோர்கள் இந்த எடைக் குறைப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒருவர் கூறுகையில், வழக்கமாக இரண்டு இட்லியும், ஒரு வடையும் சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். ஆனால் இப்போது நிலைமை மோசமாகி விட்டது. கூடுதலாக ஒரு இட்லியாவது சாப்பிட்டாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாப்பிட்ட திருப்தியே இல்லை என்றார்.
ஆனாலும் கூட்டம் குறையலே
தெற்கு பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இட்லி எடைக் குறைப்புக்குப் பின்னரும் கூட்டம் குறையவில்லையாம். ஸ்லிம் இட்லியை விரும்பி சாப்பிடுகின்றனராம் வாடிக்கையாளர்கள். காரணம் எடை, அளவுதான் குறைந்துள்ளதே தவிர தரம் அப்படியே இருப்பதால் என்று கூறுகிறார் ஹோட்டல் உரிமையாளர்.