ஹைதராபாத்: குண்டு வைத்த தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்!
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகள் பற்றி துப்புக் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று தேசிய விசாரணைக்குழு அறிவித்துள்ளது.
ஆந்திரபிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதியன்று இரண்டு இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 17 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து தேசிய விசாரணை ஆணையம் நடத்திவரும் விசாரணையில் இதுவரை துப்பு எதுவும் துலங்கவில்லை. தீவிரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், இரட்டை குண்டு வெடிப்பை நடத்திய சதிகாரர்கள் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய விசாரணைக்குழு அறிவித்து உள்ளது. தகவல் தருபவரின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.