இலங்கை விவகாரம்: நெல்லையில் மாணவர்கள் இன்று பெருந்திரள் போராட்டம்
நெல்லை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி நெல்லையில் அனைத்து கல்லூரி மாணவர்கள் 9ம் நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் இன்று பெருந்திரள் போராட்டம் துவங்கி நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் தமிழர்களை கொன்று குவிந்த ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முதல் 4 தினங்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்தினர். பின்னர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மாணவர்கள் தங்களின் உச்சகட்ட பெருந்திரள் போராட்டத்தை இன்று நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள ஜோதிபுரம் மைதானத்தில் இந்த தொடர் முழக்கம் நடைபெற்று வருகின்றது. இன்று காலை 9 மணிக்கு துவங்கிய இந்த தொடர் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.