அந்த 5 மணி நேரம்… மாணவர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த திருப்பூர்…
திருப்பூர்: அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் திருப்பூரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் 5 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் திங்கள்கிழமையன்று உண்ணாவிரதம், ரயில் மறியல், சாலை மறியல், பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இரண்டாம் நாளான செவ்வாய்கிழமையன்று நடைபெற்ற மனிதச்சங்கிலி, சாலை மறியல், ரயில்மறியல் போராட்டத்தினால் 5 மணிநேரம் திருப்பூர் மாநகரமே ஸ்தம்பித்தது. திருப்பூர் கல்லூரிகளின் மாணவர்களுடன் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் பலரும் சேர்ந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி முன்பு மனிதச்சங்கிலி
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
திடீர் சாலைமறியல்
மனிதச் சங்கிலிப் போராட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற நிலையில், திடீரென மாணவர்கள் டவுன்ஹால் பகுதியில், காலை 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்..
500-க்கு மேற்பட்ட மாணவர்கள் டவுன்ஹால், ரயில் நிலைய நுழைவாயில், ரயில்வே மேம்பால நுழைவுப் பகுதி, ஊத்துக்குளி சாலை ஆகிய இடங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் நகரின் மையப்பகுதியைக் கடந்துசெல்ல முடியாமல், ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் நகரின் முக்கியச் சாலைகள் வழியாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, ஊத்துக்குளி சாலை, நடராஜா திரையரங்கு சாலை, மங்கலம் சாலை ஆகியவற்றில் நீண்ட வரிசையில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்ததால், நகரின் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ரயில் மறியலில் வாக்குவாதம்
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருபகுதி மாணவர்கள், பிற்பகல் 12.50 மணியளவில் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆலப்புழை- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மின்சார ரயில் எஞ்ஜின் மீது ஏறி நின்றனர். அப்போது ஒரு மாணவரை போலீஸார் இழுத்து கீழே இறக்கினர். இதனால், போலீஸாருக்கும், மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறைக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர். இதனால் அந்த ரயில் 40 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்
மாணவர்களின் போராட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து டவுன்ஹால் பகுதியில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் அதிரடிப் படை போலீசாரும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டனர்.
மாணவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் பேச்சு நடத்தினார். இருப்பினும் சாலை மறியல் போராட்டத்தை மாணவர்கள் கைவிடவில்லை.
அரசியல் கலக்காத போராட்டம்
மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தபோது அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாணவர்களிடம் ஏதாவது கூறியவாறு இருந்தனர். இந்த நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அப்புறப்படுத்தினர். இதனையடுத்தும் மைக்கில் முழக்கமிட்ட மாணவர்கள் அரசியல் கட்சியினர் யாரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம். கட்சி சார்ந்தவர்கள் யாரேனும் இருந்தால் வெளியேறுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
மறியலை கைவிட்ட மாணவர்கள்
இந்நிலையில், திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் சிவபிரகாசம், செயலாளர் சண்முகவேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மாணவர்களிடம் சமரசம் பேசினர். இதனையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர். "மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, மத்திய அரசு இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கூறவில்லை. இதே நிலை நீடித்தால் மீண்டும் பல கட்டங்களாகப் போராட்டம் நடைபெறும்' என்ற எச்சரிக்கையுடன் மாணவர்கள் கலைந்து சென்றனர்.