இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் மீது சிங்களர்கள் கொலைவெறி தாக்குதல்

இலங்கையின் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் அருகே தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகம் உள்ளது. இன்று அந்த கட்சி எம்.பிக்களும், தொண்டர்களும் சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கை தேசியக் கொடிகளுடன், வந்த முகமூடி ஆசாமிகள் திடீரென அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தமிழர்களைப்பற்றி கடுமையான வார்த்தைகளால் திட்டிய அவர்கள் பொருட்களையும் அடித்து நொருக்கினர்.
சிங்களர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில், இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அவர்களை சிங்கள போலீசார் விடுவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களிடம் செல்வாக்கு கொண்ட கட்சியாகும். இந்த கட்சிக்கு 13 எம்.பி.க்கள் உள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது, சிங்கள புலனாய்வுத்துறை இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications