கற்பழிப்புகள்: இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பத்துநாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் அந்தப் பெண் மரணத்தை தழுவினார். இதனால் எழுந்த போராட்டம் உலக நாடுகளிடையே குறிப்பாக வெளிநாட்டுப் பெண்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறுவது அதிகரித்துள்ளது. இந்தியப் பெண்களை மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த இரண்டு பெண்களிடம் கூட கை வரிசையை காட்டியுள்ளனர் கயவர்கள். அதனாலேயே இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பெண்களின் எண்ணிக்கை 35 சதவிகிதம் குறைந்து விட்டதாம். ‘
பாதுகாப்பின்மை பற்றிய அச்சம்
பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறைவே வெளிநாட்டுச்சுற்றுப்பயணிகள் வருகை குறைவதற்கு காரணம் என்று டில்லியில் உள்ள தாஜ் குரூப் ஓட்டல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் எண்ணிக்கை 35% குறைவு
சுற்றுலா துறைக்கான ஆய்வு அமைப்பான ‘அசோச்சம்' இது பற்றி சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. அதில் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவீதமும், பெண்களின் எண்ணிக்கை மட்டும் 35 சதவீதமும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளிடம் கைவரிசை
மத்திய பிரதேச மாநிலத்தில் 8 பேரால் சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலா பயணி கற்பழிக்கப்பட்டது, ஓட்டலில் தங்கியிருந்த இங்கிலாந்து சுற்றுலா பயணியிடம் அந்த ஓட்டலின் ஊழியர் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த போது, மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த பெண் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தது போன்ற செய்திகள், இந்திய சுற்றுலா துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பயணத்தை ரத்து செய்த பெண்கள்
இதன் தாக்கத்தால், கடந்த 3 மாதங்களில் மட்டும் பல வெளிநாட்டினர் இந்தியா வருவதற்காக செய்திருந்த முன்பதிவை ரத்து செய்துக்கொண்டிருப்பதாக சுற்றுலா அமைப்பாளர்கள் 72 சதவீதம் பேர் கூறுகின்றனர்.இவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம்
வெளிநாடுகள் எச்சரிக்கை
ஆண் துணை இல்லாமல் பெண்கள் தனியாக இந்தியாவிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம்' என பலநாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.
கலாச்சார சீரழிவினால் தொழில் பாதிப்பு
இந்தியாவின் பண்பாடும், கலாச்சாரமும்தான் வெளிநாட்டினரை, குறிப்பாக அங்குள்ள பெண்களைக் கவருகிறது. இந்த நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் வெளிநாட்டினரிடையே வேரூன்றுவது சுற்றுலாத்துறையை பாதிக்கும் என்கின்றனர் அந்த தொழிலை நம்பியுள்ளவர்கள்.