விசாரணைக்கு அழைத்து சென்றவரை போலீசார் அடித்துக் கொன்றதாக புகார்: சாலை மறியல்
சென்னை: சென்னை, மதுரவாயலில் விசாரணைக்கு அழைத்து செல்லபட்டவர் மர்மமான முறையில் இறந்ததால், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் தெருவில் வசித்து வந்தவர் கதிரவன் (34). ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நேற்று முன்தினம் கதிரவன் அப்பெண்ணை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து செல்வதற்குள் கதிரவன் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று மாலையிலும் கதிரவனுக்கும், அப்பெண்ணுக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் தெரிந்ததும் உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று கதிரவனை மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
நேற்று இரவு வரை கதிரவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது கதிரவன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கதிரவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் திரண்டு வந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மதுரவாயல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலை மறியலும் செய்ததால் , அங்கு பரபரப்பு நிலவியது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கதிரவனை போலீசாரே அடித்துக் கொன்று விட்டனர் என்று, அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை கதிரவனின் உறவினர்கள் சுமார் 500 பேர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் பேருந்து நிறுத்தம் அருகே திரண்டனர். சாலையின் 2 பக்கமும் அமர்ந்து அவர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டோர் கதிரவனின் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கு காரணமாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போலீசாரின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாமல் கதிரவனின் உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வேறு வழியின்றி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள். இதில் ஒரு சிலர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர். இதன் காரணமாக வானகரம் பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.