ஜெ. வளர்ப்பு மகனா சுதகாரன்?: பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுகவினரிடம் கேள்வி
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது வளர்ப்பு மகனா சுதாகரன்?என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முத்துமணியிடம் அரசு வழக்கறிஞர் பவானிசிங் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா மீதான ரூ.65 கோடி சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முத்துமணியிடம் அரசு வழக்கறிஞர் பவானிசிங் விசாரணை நடத்தினர்.
அப்போது வருமான வரித்துறையிடம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் என முத்துமணி கூறியிருந்தார். அதைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனா சுதகாரன் என பவானிசிங் கேள்வி கேட்டார். ஆனால் முத்துமணியோ ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் அல்ல என்று கூறினார். அப்படியானால் வருமான வரித்துறையிடம் ஏன் அப்படி கூறினீர்கள்? என்று கேட்டதற்கு அப்படி நான் எழுதிக் கொடுத்திருந்தால் அது தவறு என்றார் முத்துமணி.
மேலும் அ.தி.மு.க.வினரிடம் 60 லட்சம் ரூபாய் வசூலித்து ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்ததாக கூறுவது தவறு. சுதாகரன், தன் வளர்ப்பு மகன் என்பதால் திருமண செலவுகள் அனைத்தையும் ஜெயலலிதா செய்தார். அவர் மீது வழக்கு பதிவானவுடன் அவரை காப்பாற்ற பொய் சொல்கிறீர்கள் என்றும் வழக்கறிஞர் பவானிசிங் கூறினார். ஆனால் முத்துமணியோ தாம் சொல்வதுதான் உண்மை என்றார்.
இதேபோல் திருப்பூர் ஈஸ்வரன், பொள்ளாச்சி ஜேம்ஸ் ராஜா, கோயம்புத்தூர் ரா கோபால், கரூர் நெடுஞ்செழியன், மன்னார்குடி வாசு ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் இந்த விசாரணை தொடர்கிறது.