வெயில் கொடுமை.. பக்தர்களுக்காக திருப்பதி கோவிலைச் சுற்றி பந்தல்
திருப்பதி: கொளுத்தும் வெயிலை சமாளிக்க திருப்பதி கோவிலை சுற்றி பந்தல் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
கோடைகாலம் ஆரம்பமாகும் முன்பே திருப்பதி கோவில் பகுதியில் வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. தற்போது 99 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. இதனால் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகிறார்கள். கோடை விடுமுறை தொடங்கியதும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் வெயிலை சமாளிப்பதற்காக கோவில் முழுவதும் ஆங்காங்கே குளிர்ந்த பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. திருப்பதி கோவிலை சுற்றி 4 மாடவீதிகளிலும் குளிர்ந்த பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் நடக்கும்போது கால் சுடாத வகையில் இந்த பெயிண்ட் பாதுகாக்கிறது. பக்தர்கள் உள்ளே நுழையும் இடத்திலும், தரிசனம் முடிந்து வெளியே வரும் இடத்திலும் சிவப்பு நிற கார்பெட் விரிக்கப்பட்டுள்ளது.
வராக சுவாமி கோவில் முதல் வைபவ மண்டபம் வரை இந்த கார்பெட் விரிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்விக்கப்படுகிறது. இதன்மூலம் பக்தர்கள் வெயிலை சமாளிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.