பிரதமருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு- காமன்வெல்த் மாநாட்டை இடம் மாற்ற வலியுறுத்தல்
டெல்லியில், செவ்வாய்கிழமையன்று பிரதமரை ஜி.கே.வாசன் சந்தித்துப்பேசினார் சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும், சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்பது குறித்தும் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு பற்றி செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதில் தமிழக மக்களுக்கு விருப்பம் இல்லை என்றும் பிரதமரிடம் விளக்கினேன். இந்த விஷயத்தில் பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை பிரதமருக்கு எடுத்துரைத்தேன்.
சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பிடித்துச் சென்றனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை 10 நாள்கள் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. பிறகு, அவர்களது காவல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை இந்தியா ஏற்கக்கூடாது என பிரதமரிடம் கூறினேன்.
தமிழக மீனவர்களுக்கு எதிரான, இலங்கை கடற்படையினரின் போக்கு குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச வேண்டும். அதைத் தடுக்க, இலங்கை அதிபருக்கு வலுவான முறையில் நெருக்குதல் கொடுக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொண்டேன். வெளியுறவுத் துறையுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் கூறினார். இவ்வாறு வாசன் தெரிவித்தார்.