'நான் தான் கம்பூயிஸ்'.. இன்டர்நெட்டை 'நோகடித்த' கம்ப்யூட்டர் கிறுக்கன்....!
நியூயார்க்: உலகம் பூராவும் தற்போது இன்டர்நெட் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் என்று அத்தனை பேரும் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோர் சந்தேகமும் தற்போது ஸ்வன் ஒலப் கம்பூயிஸ் என்பவர் மீது திரும்பியுள்ளது.
சரி யார் இந்த கம்பூயிஸ் என்ற கேள்வி எழலாம்... காதல் கிறுக்கன் போல, இவர் ஒரு கம்ப்யூட்டர் கிறுக்கன். அதாவது கம்ப்யூட்டர்களை காலி செய்யும் ஸ்பேம்களை, வைரஸ்களை கிளப்பி விட்டு காலி செய்வதில் கில்லாடி.
இவர் ஒரு வெப்சைட் வைத்திருக்கிறார். பேஸ்புக் பக்கமும் உள்ளது. அங்கு போய் பார்த்தால் கம்பூயிஸ் குறித்த நிறைய சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடிகிறது.
அதிலிருந்து கொஞ்சம் தகவல்கள் இதோ...
நான் ஒரு முடிசூடா அமைச்சர்...
சைபர்பங்கர் குடியரசின் தகவல் தொடர்பு மற்றும் வெளி விவகாரத்துறை அமைச்சர் என தன்னைத்தானே கூறிக் கொள்கிறார் இந்த கம்பூயிஸ்.
ஸ்பேம்களின் இளவரசனும் இவரே...
அதேபோல இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதாவது ஸ்பேம்களின்
இளவரசன் என்பது. இப்படியும் இவரை சிலர் அழைக்கிறார்கள்.
டச்சு நாட்டு குறும்புக்காரர்
கம்பூயிஸின் சொந்த நாடு ஆலந்தாகும். அந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பல நாட்டுக்காரர்களை நொந்து போக வைத்து வருகிறார் இந்த கம்பூயிஸ்.
சைபர் அட்டாக்கா.. அப்ப அவரேதான்...
எங்காவது சைபர் அட்டாக் நடந்தால் உடனே கம்பூயிஸ் மீதுதான் சந்தேகம் வரும். அப்படி ஒரு தில்லாலங்கடியான பார்ட்டி இவர்.
அசாஞ்சே மாதிரி நானும் அம்பலவாயன்...
இவரது வெப் சைட்டில் போய்ப் பார்த்தால், தன்னை இன்டர்நெட் சுதந்திரப் போராட்ட வீரர் என்று குறிப்பிட்டுள்ளார் கம்பூயிஸ். மேலும் ஜூலியன் அசாஞ்சே மாதிரி தானும் ஒரு 'அம்பலவாயன்' என்றும் கூறிக் கொள்கிறார்.
ரொம்ப பிடிச்சது...
இவருக்குப் பிடித்தது ஜெர்மன் ஹெவி மெட்டர் மியூசிக், பீவிஸ், கஞ்சா.
சீ... இதெல்லாம் எனக்கு பிடிக்காதது...
யூதர்கள், அரசாங்கங்கள் ஆகியவை இவருக்குப் பிடிக்காதாம். யூதர்கள் என்றால் டென்ஷனாகி விடுவாராம்.
99ல் பிறந்த சைபர் பங்கர்
1999ம் ஆண்டு சைபர் பங்கரை தொடங்கியுள்ளார் கம்பூயிஸ். 2001 வரை அவர் ஆலந்து நாட்டு இன்டர்நெட் சேவை நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார்.அ ப்போது அந்த நிறுவன கம்ப்யூட்டர்களில் ஹேக் செய்ததால் விரட்டியடிக்கப்பட்டார்.
என்னுடன் துணைக்கு நில்லுங்கள்...
தற்போதைய சைபர் அட்டாக்குக்கு தான்தான் காரணம் என்று கம்பூயிஸ் நேரடியாக கூறவில்லை. ஆனால் இந்த தாக்குதலை அவர் வரவேற்றுள்ளார். ரஷ்யநாட்டு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எந்த நாட்டில் சட்டம் இல்லையோ, அங்கிருந்துதான் இந்த தாக்குதல் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.
கம்பூயிஸ் ரொம்பவே கன்பியூஸ் பண்றாரே...!