5 பேரின் கருணை மனுக்களை நிராகரித்த பிரணாப்; 2 பேரின் தூக்கு ஆயுளாக குறைப்பு
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பரிசீலனைக்காக 7 கொலை வழக்குகள் தொடர்பான கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்த அவர் 5 மனுக்களை நிராகரித்துள்ளார். மேலும் 2 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின் விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. தற்போது பிரணாப் வசம் எந்த கருணை மனுக்களும் நிலுவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் முன்னதாக மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் மற்றும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்ததையடுத்து அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
மேலும் மகள் மற்றும் மனைவியைக் கொன்ற கர்நாடகாவைச் சேர்ந்த சாய்பன்னா நிங்கப்பா, சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளிகள் ஞானபிரகாஷ், சைமன், மீசை மாதைய்யன், பிலவேந்திரின் ஆகியோரின் கருணை மனுக்களையும் பிரணாப் ஏற்கனவே நிராகரித்துள்ளார். மாற்றாந் தாய், அவரது மகள் மற்றும் மகனைக் கொன்ற டெல்லியைச் சேர்ந்த அட்பிரின் தூக்கு தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.