மாணவர் மரணம் ஒரு விபத்து: இதுக்கெல்லாம் சி.பி.ஐ. விசாரணையா?- மம்தா பானர்ஜி
கொல்கத்தாவில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது மாணவர் அணி தலைவர் சுதிப்தோ குப்தா, பலத்த காயம் அடைந்து மரணம் அடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. குப்தா போலீசார் தாக்கியதில் இறந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால், மின்கம்பத்தில் மோதி, பஸ்சில் இருந்து விழுந்ததால் அடிபட்டு இறந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
முழுஅடைப்பு:
இதனை ஏற்காத இந்திய மாணவர் கூட்டமைப்பு, நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கொல்கத்தாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதையொட்டி நகரின் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது..
துரதிர்ஷ்டவசமான விபத்து:
இந்நிலையில் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறியதாவது, ‘எந்த காரணமும் இல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மாணவர் சுதிப்தோ குப்தா இறந்தது ஒரு விபத்து. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. போலீசார் தாக்கியதால் அவர் இறக்கவில்லை. மாணவர் சாவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது' என அவர் கூறினார்.
காவல்துறைக்கு ஆதரவா?
காவல்துறைக்கு ஆதரவான கருத்தையே மம்தா பானர்ஜியும் கூறியுள்ளதால், மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தனது மகன் விபத்தில் சாகவில்லை என்றும், நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவரது தந்தை வலியுறுத்தியுள்ளார்.
விசாரணை தீவிரம்:
கலவரம் மற்றும் மாணவர் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்த உள்ளது. மேலும் காவல்துறை ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.