ஆசிட்டை தவறாக பயன்படுத்தினால் கடும் தண்டனை.... ஹைகோர்ட்டில் அரசு மனு
சென்னை: ஆசிட் விற்பனையை முறைப்படுத்தவும், ஆசிட் வீச்சு குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனையை கடுமையாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சாந்தி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் ஆசிட் விற்பனை தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பொதுமக்கள் எளிதாக வாங்கும் விதமாக ஆசிட் விற்பனை நடைபெறுகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள்துறை சிறப்பு செயலாளர் அமுதா பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் ஆசிட் விற்பனை மற்றும் பயன்பாட்டை முறைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் வரைவு சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம், ஆசிட் தவறாக பயன்படுத்துவதையும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவதை தடுக்கவும் கடுமையான தண்டனை வழங்கவும் வழிசெய்யும்.
இந்த சட்டம் பயன்பாட்டுக்கு வரும்வரை ஆசிட் விற்பனை மற்றும் பயன்பாட்டை முறைப்படுத்த விஷங்கள் தடுப்பு சட்டத்தை கையாள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிட்டை தவறாக பயன்படுத்துவர்கள் மீது விஷங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கும் விதமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாவட்ட சமூகநல அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் வழங்கவும் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிவாரண நிதி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசும், புதுச்சேரி அரசும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஆசிட் வீச்சு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிற 16-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவை பொறுத்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.